நிலுவைத் தொகை கட்டாவிட்டால் அபராதம்? அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு செக் வைக்கும் மசோதா
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்ட மசோதா அனைத்து குடியிருப்புகளுக்கும் குடியிருப்போர் நல சங்கங்களை உருவாக்க கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் - 2022' என்ற புதிய மசோதாவை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமாக தாக்கல் செய்யப்பட்டால் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பழைய சட்டத்துக்கு மாற்றாக இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இந்த புதிய சட்டம் 4 அல்லது அதற்கும் மேற்பட்ட கட்டிடங்களை கொண்ட குடியிருப்பு வளாகங்களை நிர்வகிக்க குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு அனுமதி வழங்குகிறது. அதேபோல் குடியிருப்போர் நலச்சங்கங்களை புதிய சட்டத்தின் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற விதியை இந்த மசோதா கொண்டு வருகிறது.
புதிய மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒரு குடியிருப்பு திட்டத்திற்கு ஒரு சங்கத்தை மட்டுமே அமைக்க முடியும். அதே நேரம் தனித்தனியாக குடியிருப்போர் நலச்சங்கங்களை உருவாக்கி கூட்டமைப்பை ஏற்படுத்த அனுமதி வழங்குகிறது. குடியிருப்பு திட்டத்தில் பொதுவான இடங்கள் மற்றும் வசதிகள் தொடர்பாக ஒரே ஒரு உறுதிமொழியை கட்டாயம் பதிவிட வேண்டும்.
குடியிருப்பு நலச் சங்கம் அமைப்பதற்கு பதிவும் உறுதிமொழியும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நிலுவைத் தொகைகளை செலுத்த தவறினால் அவருக்கு அபராதம் விதிக்க இந்த புதிய மசோதா அனுமதி வழங்குகிறது.
குடியிருப்பின் மூன்றில் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டாலோ அல்லது குடியிருப்பு பழுதடைந்து அங்கு வசிக்கும் மக்கள் அல்லது வேறு சிலருக்கு உயிருக்கு ஆபத்தாக இருந்தாலோ அதை மீண்டும் கட்ட வேண்டும் என இந்த புதிய மசோதா கூறுகிறது.
PFI சேவைகள் தீவிரவாதமா? இது நாகாலாந்து அல்ல.. ஆரியத்தை வென்ற தமிழ்நாடு - ஆளுநருக்கு சீமான் பதிலடி