தமிழக பொருளாதாரத்தை $1 டிரில்லியன் உயர்த்த இலக்கு-பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்: தமிழக அரசு
சென்னை: தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பரந்தூர் 2-வது புதிய விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
ஆனால் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை கையகப்படுத்தி பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பல மாதங்களாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பின்னர் தமிழக அமைச்சர்கள் குழு, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.

பொருளாதார இலக்கு
இந்நிலையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்ற தலைப்பில் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிய செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

24 ஆண்டுகள்
ஏறக்குறைய 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலைய உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்ட போதும் தற்போதுதான் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர்.

2028-க்குள் முடிக்கப்படும்
ரூ20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பபரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்.

புதிய வேலைவாய்ப்புகள்
இத்திட்டத்துக்கு ரூ100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சிக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. இவ்வாறு தமிழக அரசின் விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முழு அறிக்கை விவரம்:












Click it and Unblock the Notifications