சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் ஓகே! ஒரு விஷயத்தை மறக்காதீங்க: ஜிகே வாசன் முக்கிய கோரிக்கை
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையமும், மேம்பாலமும் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ரூ .393.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தில், அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

கோயம்பேட்டில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்து, வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில், சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.
மேலும், தாம்பரத்தில் இருந்து வரும் பேருந்துகள், இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன . ஆனால் செங்கல்பட்டில் இருந்து வரும் பேருந்துகள், ஜி.எஸ்.டி சாலையை கடந்து செல்ல வேண்டியது சூழல் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் மேம்பாலமும், புதிய ரயில் நிலையமும் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயிலில் வருவதற்கும், அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைதான் பயன்படுத்த முடியும், இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்தில், புதிய ரயில் நிலையம் அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்கும்.
இல்லையென்றால், மாற்றாக அருகில் உள்ள வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலமும், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக புதிய ரெயில் நிலையமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications