சென்னை.. 6ம் தேதி முதல் புதிய தளர்வுகள்.. கட்டுப்பாடுகளுடன் கடைகள் இயங்கலாம்.. முதல்வர்
சென்னை: சென்னையில் 6ம் தேதி முதல் புதிய தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் சில புதிய விதிமுறைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.
புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:

''சென்னையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் காய்கறி கடைகள், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். இதேபோல், வணிக வளாகங்கள் (மால்கள்) தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
தொலைபேசியில் ஆர்டர் செய்து உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படும். நகைக்கடைகள் , ஜவுளிக்கடைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நேற்று வரை சென்னையில் மட்டும் மொத்தம் 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 40,111 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 23,581 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 996 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். 58.84 சதவீத ஆண்களும், 41.16 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,297 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேருக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications