"எல்லாமே ஒரே இடத்துல.." அபராதத்தையும் இனி இ-சேவை மையத்திலேயே கட்டலாம் - புதிதாக 194 சேவைகள்!
சென்னை: இ-சேவை 2.0 திட்டத்தில் புதிதாக 194 சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது.
இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தில் புதிதாக 194 சேவைகள் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்களிலேயே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ள 580 மையங்கள் உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
இ-சேவை மையங்கள் மூலமாக வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட அரசின் பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இ-சேவை 2.0
தமிழ்நாட்டில் விரைவில் இ-சேவை 2.0 பயன்பாட்டுக்கு வரும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.
பேரவையில் அமைச்சர் பேசுகையில், "இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு என்று தனியாக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன்மூலம் பலமுறை சேவைகளை பெற முடியும்." எனத் தெரிவித்தார்.

புதிதாக 194 சேவைகள்
இ-சேவை 2.0 திட்டத்தில் புதிதாக 194 சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்பத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், வருவாய் நிர்வாகத்துறை, அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கால்நடைத் துறை, சென்னை போக்குவரத்து காவல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை, பள்ளிக் கல்வி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான சேவைகள் வழங்கப்படவுள்ளன.

ஒரே இடத்தில் பல சேவைகள்
இதன் மூலம் இனிமேல் போக்குவரத்து காவல்துறை விதிக்கும் அபராதங்களையும் இ-சேவை மையங்களிலேயே சென்று செலுத்த முடியும். சென்னை மாநகராட்சி தொடர்பான கட்டணங்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே செலுத்த முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அலைச்சல் இன்றி அருகேயுள்ள இ-சேவை மையங்களிலேயே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications