'பார்ட் டைம் ஜாப்".. வாட்ஸ் அப்பில் லிங்க் வந்தால் கவனமாக இருங்க மக்களே.. அலர்ட் செய்த போலீசார்
சென்னை: வேலை தேடுபவர்கள் மற்றும் இல்லத்தரசிகளை குறிவைத்து பகுதி நேர வேலை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக மோசடிகள் நடப்பதாக புகார்கள் அதிக அளவில் எழத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்ப வசதி பெருகிவிட்ட இந்த காலத்தில் புதுப்புது மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. மக்கள் தற்போது அதிக அளவில் இணையவசதியை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதால் வங்கி விவரங்களை பெற்று அதன் மூலம் ஒருபக்கம் மோசடி நடைபெறுகிறது.

அதாவது வங்கிகளில் இருந்து பேசுகிறோம்.. ஆதார் எண் அப்டேட் செய்ய வேண்டும்.... ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது என எதையாவது செல்போனில் அழைத்து பேசும் மோசடி கும்பல், இந்த விவரங்கள் கிடைத்து விட்டால் உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணத்தை வாரி சுருட்டி விடுகின்றனர். இப்படியான மோசடிகள் ஒருபக்கம் என்றால் பரிசு பொருள் விழுந்து இருப்பதாகவும் அதனைபெற குறிப்பிட்ட தொகையை கட்டுமாறும் கூறியும் மோசடி நடைகிறது.
பெரும்பாலும் மக்களின் ஆசையை தூண்டி வலையில் விழ வைத்தே இது போன்ற மோசடிகள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், சமீப காலமாக ஒரு நூதன மோசடி அதிகரித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறியிருப்பதாவது:- செல்போனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பார்ட் டைம் ஜாப் என வாட்ஸ் அப்பில் மெசேஜ் வருகிறது.
இந்த வேலையை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்கை கிளிக் செய்ய சொல்வர்கள். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் ஒரு டெலிகிராம் டாஸ்க் குருப்பில் இணைந்து விடுவர். அந்த குரூப்பில், யூடியூப், சினிமா, ஹோட்டல் போன்றவற்றை 'லைக் மற்றும் 'ரிவியூ ' செய்தால் ரூ.50 தருவதாக கூறுவார்கள். இதன்படி செய்தால் உடனடியாக அதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவார்கள்.

தொடர்ந்து இதைப்போல பணம் பெற்று இலாபம் பெற 'பிரிபெய்டு டாஸ்க்' என்ற புது டெலிகிராம் குருப்பில் இணைத்து விடுவார்கள். இந்த குரூப்பில் ஏற்கனவே இருக்கும் பலரும் கூட்டு சேர்ந்து அதிக அளவு பணம் கிடைத்ததாக கூறி ஆசையை தூண்டுவார்கள். அதன்பிறகு காயின் கலெக்டர் என்ற இணைய தளத்தில் ஒரு கணக்கை தொடங்கி டாஸ்க்குகளையும் கொடுப்பார்கள். மொத்தம் 20 டாஸ்க்குகளை கொடுத்து.
ஒவ்வொரு டாஸ்கிற்காக இந்த மோசடி கும்பல் பணம் அனுப்பும். இதற்காக ஒரு வங்கிக் கணக்கையும் உருவாக்கி அதில் முதலீடு செய்து வருவார்கள். பின்பு பகுதி நேர வேலைக்கான மொத்த தொகையை காயின் கலெக்டர் இணையதளத்தில் அவர்களுக்கென்று தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் தெரியப்படுத்துகிறார்கள்.
இந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் அனைத்து டாஸ்குகளையும் கூறி முதல் டாஸ்க்கில் ஆயிரம் ரூபாயில் இருந்து 10-வது டாஸ்க்கில் 1 கோடி ரூபாய் வரை கட்ட சொல்லி மோசடி நடக்கிறது. இது போல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே, இதுமாதிரியான டெலிகிராம், வாட்ஸ் அப் குரூப் மெசேஜ்களை பார்க்கும் போது மக்கள் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துவிட்டாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications