"புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்பு இருக்கு.." மாஸ்க் அணிவது அவசியமா? சவுமியா சுவாமிநாதன் விளக்கம்!
காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை: மாஸ்க் அணிவதை பொருத்தவரை இப்போது அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கொரோனா நம்முடன் தான் இருக்கும், தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும் காய்ச்சல் வருவது சாதரணமானது. எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்த பெருந்தொற்று எப்படி வரும் என்று சொல்ல முடியாது என்று கூறினார். இது தொடர்பாக சௌமியா சுவாமிநாதன் மேலும் கூறியதாவது:-

நாம் தயாராக இருக்க வேண்டும்
கொரோனா ஒரு எண்டமிக் ஆக மாறி வருகிறது. கொரோனா முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. அது இனிமேல் நம்ம கூடதான் இருக்கப்போகிறது. எதிர்ப்பு சக்தி இயற்கையாகவும் தடுப்பூசி மூலமாகவும் அதிகமாக நமக்கு இருப்பதால் கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளது. எதிர்கால தொற்றுக்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். சார்ஸ் கோவ் -2 வைரஸ்கள் கூட எப்போது வேண்டும் ஆனாலும் மாறலாம். நிறைய வேரியண்ட்கள் உள்ளன.

27 வகையான வைரஸ் குடும்பங்கள் உள்ளன
ஒமைக்ரான் வகை கொரோனா தான் உலக அளவில் அதிகமாக உள்ளது. எனினும், ஏதாவது மீயூடேஷன் எற்பட்டு முற்றிலும் மாறினால் மீண்டும் ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம். இதனால், கொரோனா கண்காணிப்பு மிகவும் முக்கியம். அடுத்த பெருந்தொற்று எப்படி வரும் என்று சொல்ல முடியாது. இன்புளூயன்சா வைரசாக இருக்கலாம். இன்னொரு கொரோனா வைரசாக இருக்கலாம். கிட்டத்தட்ட 27 வகையான வைரஸ் குடும்பங்கள் உள்ளன.

எதனால் காய்ச்சல், ஜூரம் வருகிறது
அதில் இருந்து எப்போது வேண்டும் என்றாலும் ஒரு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவலாம். எனவே அதற்கு ஒரு தயார்நிலைக்கான திட்டம் தேவை. சர்வதேச அளவில் இதற்கு ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை முன்னெடுக்க உலக சுகாதாரம் பணியாற்றி வருகிறது. பெருந்தொற்று காரணமாக பிற தடுப்பூசிகள் போடுவது உலக அளவில் குறைந்துவிட்டது. காய்ச்சல் என்பது ஒரு அறிகுறிதான். இது எதனால் வருகிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எதனால் காய்ச்சல், ஜூரம் வருகிறது என்பதை கண்டுபிடித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்.

மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது
மாஸ்க் அணிவதை பொருத்தவரை இப்போது அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , ஜூரம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது. மாஸ்க் போடாமல் இருமினால் எந்த நோயாக இருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது. மாஸ்க் போடுவது சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்கள் பரவுவதை தடுக்க உதவும். எனவே மாஸ்க் போடுவதை ஒரு பழக்கமாக கொள்வது நல்லதுதான். குறிப்பாக சில இணைநோய்கள் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது வெளியில் செல்வது அவர்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications