யார் அந்த "முருகன்" பெயர் கொண்ட நபர்? தமிழகத்தின் அடுத்த முதல்வர்.. மகா சிவ நாடி சொன்ன அதிரடி ஆருடம்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் மகா சிவ நாடி ஜோதிடத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என ஓலைச்சுவடியில் வந்துள்ளதாக ஜோதிடர் சிவசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் மற்றும் மோடி குறித்த கணிப்புகள் பலித்த நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி கோவிலின் தனிச்சிறப்பு உலகப்புகழ் பெற்ற நாடி ஜோதிடமாகும்.

மனிதர்களின் கைப் பெருவிரல் ரேகையைக் கொண்டு, அவர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை ஓலைச்சுவடிகளின் வாயிலாகத் துல்லியமாகக் கணித்துக் கூறும் இந்த முறை, காலங்களைக் கடந்த ஒரு அதிசயக் கலையாக இன்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது.
வைத்தீஸ்வரன்கோவில் நாடி ஜோதிடம்
அதனால்தான் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வியல் சந்தேகங்களுக்கு விடைதேடி இந்தத் திருத்தலத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இங்குள்ள நாடி ஜோதிட நிலையங்களில் மகா சிவ நாடி, அகத்தியர் நாடி, பிருகு நாடி மற்றும் கௌசிக நாடி போன்ற பல்வேறு சித்தர்களால் அருளப்பட்ட ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒருவரது கைப் பெருவிரல் ரேகையின் அடிப்படையில் அதற்குப் பொருத்தமான ஓலைச்சுவடியைத் தேடி எடுத்து, அதில் உள்ள சித்தர்களின் பாடல் வரிகளை விளக்குவதன் மூலம் ஒருவரின் தொழில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
சிவனின் இளைய மகன்
இந்த சிறப்பு வாய்ந்த கோயிலுக்குதான் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.. பல்வேறு செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆன்மீகக் கணிப்பு அரசியல் கட்சியினரிடையே புதிய விவாதத்தைக் கிளப்பி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சித்தர்களால் பாடல் வடிவில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆருட காண்டத்தில், வரும் தேர்தலில் யார் வென்று ஆட்சிக் கட்டிலில் அமருவார் என்பது குறித்துத் தேடப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
அந்தப் பாடலில், "சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர், நல்லவர்களின் துணையுடன் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
மீண்டும் முதல்வர் பழனிசாமி?
சிவனின் இளைய மகன் என்றால் அது முருகப் பெருமானைக் குறிக்கும். முருகனின் பெயர்களில் ஒன்றான "பழனிசாமி" என்ற பெயரைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராகப் போகிறார் என்பதை இது மறைமுகமாகச் சொல்கிறது என்று நாடி ஜோதிடர்கள் விளக்குகிறார்கள். குறிப்பாக "மீண்டும்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே முதல்வராக இருந்த ஒருவரே அந்த இடத்திற்கு வருவார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுவதாக அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்களாம்.
இது குறித்து மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி சொல்லும்போது, இந்த ஓலைச்சுவடிகளின் துல்லியத்தன்மை ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது.. அதுபோலவே 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவார் என்று கணிக்கப்பட்டது.
நாடி ஜோதிடம் சொல்வதென்ன
இப்போது நாடியில் வந்துள்ள தகவலின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியுடன் பழனிசாமி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது' என்று உறுதியாகக் கூறுகிறார். இந்தத் தகவல் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தைத் தந்திருந்தாலும், ஆளும் தரப்பினர் மற்றும் பிற கூட்டணி கட்சிகளிடையே ஒருவிதப் படபடப்பை உருவாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், இத்தகைய ஆருடங்கள் வெளியாவது வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கள நிலவரம் மற்றும் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த கணக்கீடுகளில் மூழ்கியுள்ள அரசியல் கட்சிகள், தற்போது இந்த ஜோதிடக் கணிப்பையும் தீவிரமாகக் கவனித்து வருகின்றன.
சித்தர்கள் வாக்கு பலித்ததா
ஒருபுறம் இது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று ஒதுக்கப்பட்டாலும், கடந்த காலக் கணிப்புகளின் நிஜமான முடிவுகள் இதை அலட்சியப்படுத்த முடியாமல் செய்கின்றன... எனவே தமிழக அரசியலில் இந்த "முருகன் பெயர்" கொண்ட நபரின் வருகை பற்றிய விவாதம் ஓய்வதாக தெரியவில்லை.
நாடி ஜோதிடம் போன்ற பாரம்பரியக் கலைகள் சொல்லும் ஆருடங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜனநாயகத்தில் மக்களின் வாக்கு தான் இறுதித் தீர்ப்பை எழுதும் "ஓலைச்சுவடி" என்பதை இங்கே நாம் ஆணித்தரமாக சொல்ல வேண்டி உள்ளது..!!!












Click it and Unblock the Notifications