தமிழகத்தில் என்ஐஏ சோதனை.. சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சியில் அதிரடி.. பரபர பின்னணி
சென்னை: இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதுதொடர்பான சந்தேகத்தில் இன்று தமிழ்நாட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர், மண்ணடி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட சில இடங்களில் சோதனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி வழங்கல், பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அந்த அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனையும் மேற்கொண்டனர். இதில் 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் கூட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி என்ஐஏ சோதனைகள் நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தான் இன்று காலை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை என்பது தொடங்கியது.
அதாவது சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான இடங்கள் மற்றும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நபர்களாக கருதப்படுவோரின் வீடுகளில் நுழைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. சென்னையை பொறுத்தமட்டில் திருவொற்றியூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்கின்றனர். இந்த சோதனைகளால் தமிழ்நாட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications