நீலகிரி, கோவையில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்! சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 16 செ.மீ. மழையும், வூட் பிரையர் எஸ்டேட் பகுதியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தேவாலா, ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த
வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 5 மாவட்டங்களில் கன மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-ம் தேதி வரை மிதமான மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 14-ம் தேதி வரும் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வரும் 15-ம் தேதி வரை, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.