நீலகிரி, கோவையில் நீடிக்கும் கனமழை - அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறையில் தொடர்மழை நீடித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. காலையில் மழை பெய்து கொண்டிருந்ததால் அரசு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் குடைபிடித்தபடி சென்றனர். பலத்த மழை காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை, பந்தலூர், சின்னக்கல்லார், சின்கோனா அவலாஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளில் 9 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. பெரியாறு, நடுவட்டம், கொடைக்கானல், தலைஞாயிறு உள்ளிட்ட ஊர்களில் 4 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று முதல் 20ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் கனமழையும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். 20ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். அரபிக்கடல் பகுதிகளில் கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications