வைரங்களிலேயே புரண்ட நீரவ் மோடி கம்பெனியின் பேலன்ஸ் என்ன தெரியுமா? ஒரு பீட்ஸா கூட வாங்க முடியாது!
நீரவ் மோடியின் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வெறும் ரூ 236 மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: வைர வியாபாரி நீரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ரூ 236 மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் வைர வியாபாரி நீரவ் மோடி. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தப்பியோடிய நிலையில் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் வைர வியாபார நிறுவனத்தை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான நடைமுறைகளை கவனிக்க லிக்விடேட்டர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அதன்படி நீரவ் மோடியால் மோசடி செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு உரிய தொகையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

கோடக் மஹிந்திரா வங்கி
அண்மையில் கோடக் மஹிந்திரா வங்கி தங்களிடம் உள்ள நீரவ் மோடி நிறுவனத்தின் கணக்கில் இருந்து வருமான வரி பாக்கிக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ 2.46 கோடியை அளித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கியில் உள்ள -பயர்ஸ்டார் நிறுவனத்தில் கணக்கை ஆராய்ந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

ரூ 236
அந்த கணக்கில் வெறும் 236 ரூபாய் மட்டுமே பாக்கி இருந்தது. இதே போல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகள் செலுத்த வேண்டிய தொகை மொத்த நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை மட்டுமே. இந்த நிலையில் லிக்விடேட்டர் மிச்சம் உள்ள பணத்தை விடுவிக்கக் கோரி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றம்
ஏற்கெனவே கடந்த வாரம் இதே காரணத்திற்காக சிறப்பு நீதிமன்றத்தை நாடிய போது யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகள் தவறாமல் 3 மாதங்களுக்குள் உரிய தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கணக்கில் இருந்து ரூ 17 கோடி மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மீதத் தொகையை மாற்றுமாறு பணத்தை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட லிக்விடேட்டர் அதிகாரி ஈமெயில் அனுப்பியுள்ளார். இதற்கு வங்கி தரப்பு பதிலளிக்கவில்லை.

வழக்குச் செலவு
கடந்த வாரம் நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு செலவுக்காக ரூ 1.5 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு உத்தரவிட்டனர். அதற்கு அவர் தனது சொத்துகளை இந்தியாவில் முடக்கிவிட்டதால் போதிய பண ஆதாரமில்லை, மாதம் ரூ 10 லட்சம் கடன் வாங்குவதாக தெரிவித்திருந்தார். வைரங்களிலேயே புரண்ட வைர வியாபாரியின் நிறுவன வங்கிக் கணக்கில் ரூ 236 மட்டுமே இருந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த பணத்தை கொண்டு ஒரு மீடியம் சைஸ் பீட்ஸா கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications