நாள் நெருங்கிருச்சு.. இன்னும் பிரச்சாரம் செய்யலையே நிர்மலா சீதாராமன்.. என்ன பயம்.. என்ன காரணம்!
நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை: முதல்கட்ட தேர்தலே ஆரம்பிச்சாச்சு.. ஆனால் இன்னும் தமிழ்நாட்டுக்கு நிர்மலா சீதாராமன் வரவே இல்லை.. பிரச்சாரமும் செய்யவில்லை.. ஏன் என்றும் தெரியவில்லை!
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி என்பது நாட்டின் பாதுகாப்பையே உள்ளடக்கிய துறை. உள்துறை, நிதித்துறைக்கு அடுத்தபடியாக வருவது.
மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு, முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்தான் நிர்மலா சீதாராமன்.

எம்பிக்கள்
எங்கே போய் பணியாற்றினாலும், நிர்மலா சீதாராமனை தமிழகத்து பெண்ணாகதான் நம் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதனால்தான் எம்பிக்களின் வரிசையில் நிர்மலாவின் செயல்பாடுகள் தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

காவிரி பிரச்சனை
கர்நாடக ராஜ்யசபா எம்பி என்ற ஒரே ஒரு விஷயம்தான் இடிக்கிறது. பெரும்பாலும் இவர் கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அமைச்சர் என்பவர் நடுநிலையுடன் இல்லாமல் கர்நாடகா பக்கம் சாய்வது என்பது அடிக்கடி நிகழக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக காவிரி விஷயத்தில்!

வருத்தம்
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழக எம்பிக்கள் போராட்டம் நடத்தினால், அதற்கு எப்படி பதிலடி தரலாம் என்று ஒரு ஆலோசனை கூட்டத்தையே அன்று நடத்தியவர்தான் நிர்மலா சீதாராமன். இதனால்தான் தமிழக மக்களுக்கு ஒரு வருத்தம் அவர்மீது இருந்து கொண்டே இருக்கிறது.

ஏன் வரவில்லை
இதுநாள் வரை அடிக்கடி தமிழகம் பக்கம் வந்து கொண்டிருந்தவர் திடீரென தனது வருகையை குறைத்து கொண்டு விட்டார். அதுவும் முக்கியமான தேர்தல் இது.. கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், எதற்காக பிரச்சாரத்திற்குகூட நிர்மலா சீதாராமன் வரவில்லை என்று தெரியவில்லை.

தமிழிசை
கஜா புயல் பாதிப்பு முதல் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட காது கொடுத்து கேட்டவர், எப்போது கூட்டணி விஷயம் பேச ஆரம்பித்தார்களோ அப்போதே வருகை குறைந்துவிட்டது.அவ்வளவு எதற்கு பிரதமர் கன்னியாகுமரிக்கு, திருப்பூருக்கு வந்தபோதெல்லாம் கூட இவர் வரவில்லை. ஒரு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை. மற்றவர்களுக்கு கூட வேண்டாம்.. தன் கட்சியின் மாநில தலைவரான தமிழிசைக்குகூட ஆதரவாக பிரச்சாரம் செய்யாதது ஆச்சரியமாக உள்ளது.

முக்கிய பொறுப்பு?
இதற்கு என்ன காரணம்? ஒருவேளை காவிரி விஷயத்தில் இவர்மீது இருக்கும் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக பாஜக தலைமையே இவரை பிரச்சாரத்திற்கு அனுமதிக்கவில்லையா? அல்லது நிர்மலாவே இதிலிருந்து ஒதுங்கி கொண்டுவிட்டாரா அல்லது வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு ஏதாவது முக்கிய பொறுப்பு காத்திருக்கிறதா என தெரியவில்லை.

முதல்வர் வேட்பாளர்
ஆனால் தமிழகத்தின் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக்கும் அளவுக்கு கட்சி மேலிடம் நிர்மலாவை உயரத்தில் வைத்து பார்க்கும்நிலையில், இதுவரை அவர் இந்த பக்கம் வராதது குழப்பமாகவே இருக்கிறது!












Click it and Unblock the Notifications