நிர்மலா சீதாராமனுக்கு கோபம்.. பிரதமரை இப்படியா கார்கே பேசுறது? டெல்லியில் காங்கிரஸ் மீது பாய்ச்சல்
சென்னை: பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக உயர்மட்டக் குழுவினர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் அதிரடி புகார் அளித்துள்ளனர். காங்கிரஸின் இந்த அரசியல் பாணியை கடுமையாக சாடியுள்ள பாஜக, கார்கே மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதால் தேர்தல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை இலக்கு வைத்துப் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன.

கார்கே பேசிய வார்த்தை
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கார்கே, பிரதமரை பயங்கரவாதி என்று விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பெரியார், அம்பேத்கர், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்களுக்கு எதிரானது அதிமுக - பாஜக கூட்டணி. அண்ணாதுரையின் பெயரை வைத்துக்கொண்டு அதிமுக எப்படி பிரதமர் மோடியுடன் கைகோர்க்க முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி" என தெரிவித்திருந்தார்.
இதைக்கேட்டு கொந்தளித்து போன பாஜக, கார்கே பேசியது நாட்டின் இறையாண்மைக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் எதிரானது என்று கடுமையாகச் சாடியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக கட்சியின் உயர்மட்டக் குழுவினர், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்றனர்.
பிரதமரை இப்படி சொல்லலாமா
இந்தத் தூதுக்குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் ஓம் பதக் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மல்லிகார்ஜுன கார்கே மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி விரிவான மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "கார்கேவின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும், பொதுமக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
பிரதமர் மோடியை பயங்கரவாதி என்ற பொருள்பட கார்கே விமர்சித்திருப்பது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரின் பதவியைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும், ஒரு தேசியக் கட்சியின் தலைவர் இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.
கொந்தளித்த பாஜக
தேர்தல் நேரத்தில் இத்தகைய கருத்துக்கள் சமூக அமைதியைக் குலைக்கக்கூடும் என்பதால், கார்கே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும் அல்லது அவர் மீது உரிய சட்டப்பூர்வமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் அவர் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. பிரதிநிதிகள் மனுவில் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்தனர்.
தேர்தல் ஆணையத்தில் புகார் தந்த பிறகு, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. அப்போதும் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
பிரதமரை பயங்கரவாதி என்று அழைப்பது காங்கிரஸ் கட்சியின் பழக்கமான அரசியல் பாணியாக மாறிவிட்டது.. அரசியல் எதிர்ப்பை ஆக்கபூர்வமான கருத்துகளால் சொல்லாமல், இவ்வாறு தனிநபர் மீது தரக்குறைவான தாக்குதல் நடத்துவது மிகவும் தவறான நடைமுறை.
நாட்டின் பிரதமர் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஜனநாயக மரியாதைக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கொள்கை ரீதியான விவாதங்களைத் தவிர்த்து தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்றார்.
மக்கள் செல்வாக்கு தலைவர்
அதேபோல தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் கட்சி தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய வெறுப்புப் பேச்சுகளைப் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பொறுக்க முடியாமல், ஆதாரமற்ற மற்றும் தரம் தாழ்ந்த புகார்களைக் காங்கிரஸ் தலைவர்கள் அடுக்கி வருகிறது, குறிப்பாக, கார்கேவின் பேச்சு ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிக்கும் செயல் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
விளக்கம் தந்த கார்கே
பாஜக இப்படி கொந்தளித்து கிடக்க, கார்கே தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. தான் பிரதமரை நேரடியாகப் பயங்கரவாதி என்று அழைக்கவில்லை என்றும், அவர் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறார் (Terrorising) என்ற பொருளிலேயே பேசியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தனது இந்தப் பேச்சு குறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போதே விளக்கம் அளித்த கார்கே, "பிரதமர் மோடி எப்போதும் அச்சுறுத்துகிறார். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை அவரது கைகளில் உள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்திலும்கூட அதை அவர் தனது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார். அதனால் அந்த வகையில் இவர் மக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை அளிக்கிறார் என்றுதான் சொன்னேனே தவிர, அவர் ஒரு பயங்கரவாதி என நான் கூறவில்லை" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications