மகன், மாமா, மாப்பிள்ளைதான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன? நிர்மலா சீதாராமன் அட்டாக்
சென்னை: மகன், மாமா, மாப்பிள்ளைதான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் திமுகவை குடும்ப அரசியல் என அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும். அதற்கான பணிகள் எல்லாம் கிட்டதட்ட 6 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பாஜகவில் இருக்காது.

இங்கு வந்தால் எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம். மிகப் பெரிய கட்சி என்றால் அது பாஜகதான். இங்குதான் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜாதி, மதம், ஏற்றம், தாழ்வு, சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் கட்சி பாஜக.
மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன, திறமை, உழைப்பு இருந்தால் சாமானியர்களுக்கும் நல்ல வாய்ப்பு வழங்கும் கட்சி பாஜக. எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும். மீனவர்களுக்கான தனி அமைச்சகம் வந்தது பாஜக ஆட்சியில்தான். மோடி ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்க 3 மடங்கு லாபம் கிடைக்கும். 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கும் திட்டம்தான் கல்விக் கொள்கையில் இருக்கிறது. எனவே இந்தியை யாரும் திணிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சி பெண்களுக்கு நன்றாக செய்வதாக சொல்லப்படுகிறது. அது போல் ரூ 1000 கொடுக்கிறார்கள்.
அது போல் பிரதமர் மோடியும் பெண்களுக்காக நிறைய செய்திருக்கிறார்கள். அவர் என்றாவது "நான்தான் நிறைய செய்திருக்கிறேன், என் கட்சியில்தான் பெண்கள் சேர வேண்டும்" என கட்டாயப்படுத்தியுள்ளாரா? ஆனால் இந்த மாதம் ரூ 1000 கொடுத்துவிட்டு "வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடுவியா பார்த்துடறேன்" என நம் ஊர்காரர்களை வைத்தே பெண்கள் மிரட்டப்படுகிறார்கள்.
சாராயம் இருந்தது, இப்போது போதை பொருளும் வர தொடங்கிவிட்டது. நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எனவே அந்த ரூ 1000 மட்டும் நம்மை வாழ்க்கையில் முன்னேற்றி வைத்துவிடுமா? உலகில் எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உடனே இவ்ளோ உறுப்பினர்கள் இருந்தும் ஒரு எம்பி கூட இல்லையே என கேட்பார்கள். அதற்கும் நான் பதில் கொடுத்துடறேன்.
10 ஆண்டுகளாக பிரதமர் மோடி, பெண்களுக்கு எந்த வகையில் எல்லாம் கஷ்டம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெண்களுக்கு எந்தெந்த நிலையில் உதவ வேண்டுமோ அந்தந்த நிலைகளில் பெண்களுக்கு உதவி வருகிறார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications