"யாரும் என்கிட்ட வராதீங்க.." ஒரே போடாக போட்ட நித்தியானந்தா.. என்ன காரணம் தெரியுமா?
கைலாசாவுக்கு இந்தியர்கள் வர வேண்டாம் என்று நித்தியானந்தா அறிவித்துள்ளார்
சென்னை: இருக்கிற தொல்லைகளில் இருந்து தப்பித்து, பேசாமல் கைலாசாவிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று சிலர் யோசித்து வரும் வேளையில், யாரும் இந்த பக்கம் வந்துடாதீங்க என்று அந்த கைலாசா நாட்டு அதிபர் நித்யானந்தாவே ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில்.. தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில்... உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில்.. உலகமே கைக்குள் அறிவிலாய் அடங்கிவிட்ட நிலையில்.. இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி இருந்தும், கைலாசா என்ற ஒரு தீவில் இந்த சுவாமி வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.. அவரை தேடி கைது செய்வதற்குள், கைலாசாவை தனி நாடாகவே அறிவித்துவிட்டார்.. அதற்கான பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டார்.
விருப்பம்
யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாகச் சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார்.
விவசாயம்
இந்த பேச்சை நம்பி, எத்தனையோ பேர் கைலாசாவுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள்.. அந்த நாட்டில் வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.. கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று ஒருவர் நித்தியானந்தாவுக்கு லெட்டர்கூட எழுதினார்.. இதை பார்த்து மற்றவர்களும் கைலாசா போக ரெடியானார்கள்.. தமிழகத்தில் இருந்து பலர் நித்யானந்தாவிற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.. ஆனால், சிக்கல் என்னவென்றால், இன்னைக்கு வரைக்கும் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. உலக மேப்பில் இன்னும் தேடி கொண்டே இருக்கிறார்கள்.
வெங்கடேச பெருமாள்
இதுவரை இதற்கான ஐடியாவை நித்தியானந்தா தரவே இல்லை.. மாறாக, ஏராளமான நகைகளை அள்ளி உடம்பில் மாட்டிக் கொண்டு வெங்கடேச பெருமாளாக அவதரித்து போட்டோ ஷூட் நடந்ததுதான் மிச்சம்.. இப்போது கொரோனா தொற்று அதிகமாகிவிட்டது.. இந்த 2 வது பரவல் மிக மோசமாகவும், ஆபத்தாகவும் உள்ளது.. அதனால், இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
அறிவிப்பு
நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் இதற்கான ஒரு அறிவிப்பும் கடந்த 19ம் தேதி வெளியானது.. அதில், "கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எங்கே இருக்கு?
அதாவது, கைலாசா நாட்டின் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த நாடு எங்கே இருக்கிறது, எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் பலர் விழிபிதுங்கி இருக்கிறார்கள்.. இந்த நாட்டுக்கு ஃபிளைட் இருக்கிறதா என்றுகூட தெரியவில்லை.. இந்த நாட்டை உருவாக்கி ஒரு வருஷத்துக்கு மேலாகியும் ஒருத்தரும் அங்கு போனதாக தெரியவும் இல்லை.. அப்படி இருக்கும்போது, கொரோனா தொற்றால் உலகமே உயிரை பிடித்து கொண்டு தவித்துக் கொண்டிருக்கும்போது, கைலாசாவை பற்றி யாருக்கு நினைக்க தோன்றும்?
நித்தியானந்தா
ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது.. இத்தனை கேஸ்கள் நித்தியானந்தா மீது இருந்தும், போலீசார் ஏன் தாமதப்படுத்துகின்றனர்? இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இப்போது எந்த அளவுக்கு உள்ளது? கைலாசாவை எந்த விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்கவே முடியாதா? உலக வரைபடத்தில் கைலாசா இருக்கிறதா? இல்லையா?!!