இந்து மதத்தை காக்குறீர்கள்! இயக்குநர் பேரசுவுக்கு.. கைலாசாவில் இருந்தபடியே விருதை தந்த நித்தியானந்தா
சென்னை: ஒரு காலத்தில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பேரரசுக்கு கைலாசா நாட்டில் இருந்தபடியே விருதை அறிவித்து உள்ளார் நித்தியானந்தா.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய சாமியார்களில் ஒருவர் நித்தியானந்தா. இப்போது உள்ள பல்வேறு சாமியார்களைப் போலவே இவரையும் சர்ச்சையும் பிரிக்க முடியாது.
இவர் மீது சில வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.

நித்தியானந்தா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைலாசா என்ற புதிய நாட்டை தோற்றுவித்து உள்ளதாகவும் அதன் தலைவராகத் தானே உள்ளதாக அவரே அறிவித்துக் கொண்டார். இப்படியொரு நாடு எங்கு இருக்கிறது என யாருக்குமே தெரியாது. இருப்பினும், அங்கு இருந்தவரே அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு நித்தியானந்தா பரபரப்பைக் கிளப்பிக் கொண்டு இருந்தார். இதனிடையே அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பேரரசுக்கு விருது
இந்து மதத்திற்குச் சேவை செய்வோரைப் பாராட்டி அவர் அவ்வப்போது விருதுகளை வழங்கி வருகிறார். இதனிடையே பிரபல திரைப்பட இயக்குநரான பேரரசுவை பாராட்டி கைலாச தர்ம ரட்சகா விருதை வழங்குவதாக அவர் அறிவித்து உள்ளார். கைலாசா நாட்டில் இருந்து அறிவிப்பை வெளியிடுவதாக அதில் கூறப்பட்டு உள்ளது. இந்து மதத்தைக் காக்கத் தொடர்ச்சியாகப் பேரரசு காட்டும் ஆர்வம் மற்றும் நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

உறுதுணையாக இருப்போம்
மேலும், பேரரசின் இந்து மத பற்றை தான் பார்த்து உள்ளதாகத் தெரிவித்துள்ள நித்தியானந்தா, உங்கள் படத்தின் அனைத்து தலைப்புகளும் ஆன்மீக தலங்களாகவே இருக்கும் என்றும் உங்கள் இந்து மத பணிக்காகத் தலை வணங்குகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், பேரரசுக்கு என்றும் தானும் கைலாசமும் உறுதுணையாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார்.

வெற்றிப் படங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் பேரரசு. விஜய், அஜித் என முக்கிய நடிகர்களை வைத்துப் பல ஹிட் படங்களைப் பேரரசு கொடுத்து உள்ளார். திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என்று தான் இயக்கும் படங்களுக்கு எப்போதும் ஊர்களின் பெயரையே தலைப்பாக வைக்கும் பழக்கத்தைக் கொண்டவர். இவர் கடைசியாகக் கடந்த 2015இல் சாம்ராஜ்யம் 2 என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார்.

இந்து மதம்
அதன் பின்னர் சினிமாவில் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. அதேநேரம் கடந்த சில மாதங்களாகவே அவர் இந்து மதம் சார்ந்து இவர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கூட தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் தான் அவருக்குக் கைலாச தர்ம ரட்சகா விருதை நித்தியானந்தா அறிவித்து உள்ளார்.

முதல்முறை இல்லை
அதேநேரம் நித்தியானந்தா இதுபோல விருதுகளை அறிவிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பாஜக ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளர் திருச்சி சூர்யா கைலாசா தர்மரட்சகர் விருதை நித்தியானந்தா வழங்கி இருந்தார். காணொலி மூலம் நடந்த விழாவில் திருச்சி சூர்யா, அந்த கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications