குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஓகே! ஆனால் கேஸ் சிலிண்டருக்கு மானியம் இல்லை! தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்
கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
சென்னை: இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், அதில் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநிலத்தின் நிதிநிலை மெல்லச் சீராகி வரும் நிலையில், மானியத்தை அரசு அறிவிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
இல்லத்தரசிகளுக்கு கேஸ் விலை தான் இப்போது முக்கிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 70 டாலருக்கு குறைந்துவிட்ட போதிலும், கேஸ் விலை குறையவில்லை.. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேஸ் சிலிண்டர்கள்
கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்தே வருகிறது. முதலில் மானியத்தை அரசு நிறுவனங்களுக்குச் செலுத்தவிடும். மக்கள் குறைந்த விலையில் கேஸ் சிலிண்டரை பெறலாம் என்ற நிலை இருந்தது. பாஜக ஆட்சியில் அந்த முறை மாற்றப்பட்டது. மானியம் நேரடியாகப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. முதலில் வழக்கம் போலவே மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு மானிய தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டே வருகிறது.

மானியம்
இதனால் இல்லத்தரசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டருக்கு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலேயே, இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு தரப்பில் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது

எதிர்க்கட்சிகள் கேள்வி
இருப்பினும், இதுவரை இந்த வாக்குறுதியைத் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதன் காரணமாகச் சமீபத்தில் நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மகளிருக்கான ரூ. 1000 ஊக்கத்தொகையுடன் சேர்த்து கேஸ் சிலிண்டர் மானியம் என்னாச்சு என்பதையும் முன்வைத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதே ஆளும் தரப்பின் பதிலாக உள்ளது.

கேஸ் சிலிண்டர் மானியம்
ஏற்கனவே உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் அரசு சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியத்தைப் பெறலாம். கடந்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் 100 ரூபாய் மாநில அரசு சார்பில் மானியம் அளிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்த்தனர்.

அறிவிப்பு வெளியாகுமா
இருப்பினும், இந்த பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பும் இல்லை. சிலிண்டருக்கு மானியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக மகளிருக்கு உரிமை தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பிடிஆர், "மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்" என்று மட்டும் கூறினார். அமைச்சர் இப்படிக் கூறியுள்ளதால் இனி கேஸ் சிலிண்டர்களு்ககு தனியாக எந்தவொரு மானியமும் வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications