அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாதுனு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லையே.. எகிறி அடிக்கும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என எந்த நீதிமன்றமும தடை விதிக்கவில்லை என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவை கைப்பற்ற பல வகைகளில் போராடியும் அவரால் வெற்றி பெறவில்லை. நீதிமன்றங்களை நாடிய நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லும் என்றும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் சொல்லிவிட்டன.

அப்படியென்றால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது என அனைத்தும் செல்லும் என்பதுதான். இந்த நிலையில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவார் என பலர் தெரிவித்தனர்.
அதற்கேற்ப இன்றைய தினம் காஞ்சிபுரத்தில் இருந்து தனது தமிழக சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் தொடங்குகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து சந்தித்தார். அவருடன் சந்தித்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றே கூறியிருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ்ஸும் அவருடைய அணியினரும் பயன்படுத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோக்களுடன் ஓபிஎஸ் போட்டோவும் உள்ளது.
அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத நபர்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். மற்ற தலைவர்களையும் தொடர்ந்து சந்திப்பேன். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். நீதியை நிலைநாட்டவே சென்னையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications