ரஜினிக்கு நோ மார்கெட்; விஜய்க்குதான் மார்கெட்! மீண்டும் நடிக்க வந்தால் 300 கோடி சம்பளம்?
சென்னை: ரஜினியைவிட இன்றைய தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக விஜய்தான் முன்னணியில் இருக்கிறார் என்றும் அவர் அரசியலுக்குப் போய் மீண்டும் சினிமாவுக்கு நடிப்பதற்காக வந்தாலும் அவரது மார்கெட் சரியாது என்றும் தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முரளி ராமசாமி பதவி வகித்துவருகிறார். இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, அறிக்கை வெளியிட்டிருந்தார் திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரான கேயார். தான் தலைவராக இருந்த போது சங்கத்தையும் அறக்கட்டளையையும் சேர்த்து சுமார் 11 கோடி சேமிப்பில் வைத்திருந்ததாகவும் ஆனால், அதை விஷால் தலைமையில் செயல்படும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி கஜானாவையே காலி செய்துவிட்டார்கள் என்றும் கேயார் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

ஏன் இந்தத் திடீர் புகார்? அதன் பின்னால் நடப்பது என்ன? என பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துப் பேசியுள்ள தயாரிப்பாளர் கேயார், “நான் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவிக்கு வருவதற்கு முன்பு 1987இல் மிகமிக நலிவடைந்து போய்தான் கிடந்தது. அதை முறையாக நானும் கே.ஆர்.ஜியும் சேர்ந்து 11 கோடிக்கு மேல் அதன் நிதியைப் பெருக்கி, அறக்கட்டளையை உருவாக்கி வைத்தோம். அப்போது சங்கம் என்பது பொது பிரச்சினைக்காக இருந்தது. இன்று அதன் பதவியில் இருப்பவர்கள் சொந்த ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்தி, நிதியை முழுக்க காலி செய்துவிட்டார்கள். இனியும் பொறுக்க ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த பிறகுதான் நான் என் விமர்சனங்களை அறிக்கையாக வெளியிட்டேன்.
கடந்த 1994இல் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தோம். அப்போது ஒரு பைசா பணம் கிடையாது. அப்போது தூர்தர்ஷனில் புதிய படத்தின் ஒரு பாடம் வெளியானால் 10 ஆயிரம் கொடுத்துவந்ததை மாற்றி 20 ஆயிரம் தரத் தொடங்கினார்கள். நான் போய் அதன் இயக்குநரிடம் பேசி ஒரு படத்தில் 6 பாடல்களை மொத்தமாக தருகிறோம். விலையை அதிகம் கொடுங்கள் என்றேன். அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போது சன் டிவி வளர்ந்து வந்த நேரம். அங்கே போய் 2 லட்சம் கேட்டேன். அவர்கள் 69 ஆயிரம் வரை கொடுக்க முன்வந்தார்கள். அப்படிதான் தயாரிப்பாளருக்குப் பயன் வரத் தொடங்கியது.
இன்று தயாரிப்பாளர் நலனை அக்கறை செலுத்த வேண்டிய சங்கம், கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறது. ஆகவே, கட்டாயத்தில்தான் இப்போது பேசத் தொடங்கி இருக்கிறோம். 10% ஊழலைத்தான் சொல்லி இருக்கிறோம். மீதி 90% மரியாதை கருதி இன்னும் சொல்லவில்லை.
இன்று ஒடிடி மூலமும் பணம் வருவதில்லை. ஓவர்சிஸ் மூலமும் பணம் வருவதில்லை. தரம் கெட்டுப் போய் நிற்கிறது சினிமா துறை. பலரும் பிசியாக இருக்கிறார்கள். யாரும் பணம் சம்பாதிப்பதைப் போல் தெரியவில்லை. சூர்யா போன்ற குடும்பத்தினர் அவர்களே நடித்து அவர்களே தயாரித்து அவர்களே வெளியிட்டுக் கொள்கிறார்கள். இதனால் ஒருசிலர் மட்டுமே வாழ்கிறார்கள். பல தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் இன்று வாழ்க்கையை இழந்துவிட்டனர்.
கமல் அந்த வகையில் சிறந்த மனிதர். அவரிடம் பணம் இருந்தாலும் கடன் வாங்கி படம் எடுப்பார். அதன் மூலம் சிலருக்கு லாபம் கொடுப்பார். தயாரித்தாலும் அதில் சில நியாய தர்மங்களை வைத்திருப்பார். அவரால் சினிமா இன்றும் வாழ்ந்து வருகிறது. ரஜினி அப்படி அல்ல. சரியாகக் கணக்கு கொடுக்கும் தயாரிப்பாளரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார்.
வேட்டையன் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. விளம்பரம் பிரம்மாண்டமாகச் செய்தார்கள். ஆனால், வசூல் இல்லை. இளம் ரசிகர்கள் அவருக்கு இல்லை. ஆடியன்ஸ் குறைந்துவிட்டார்கள். இப்போது விஜய் கோட் வெளியானது. விஜய்யின் பிற படங்களை ஒப்பிடும்போது கதை அளவில் சுமாரான படம்தான். ஆனால், அந்தப் படம் ஆல் டைம் ரெக்கார்ட். இதுவரை வேறு எந்தப் படமும் பண்ணாத வசூலைக் கோட் செய்துள்ளது. விஜய் படங்களே இதற்கு முன் இப்படியான வசூலைச் செய்ததில்லை. அதான் உண்மை நிலவரம்.
விஜய் நடித்து வரும் அடுத்த படம் இன்னும் மிகப்பெரிய வசூலை ஈட்டலாம். ஏனென்றால் அதான் அவரது கடைசி படம். எனவே வசூலை வாரிக் குவிக்கலாம். அதற்கான பலம் அவரிடம் இருக்கிறது. கேரளா,ஆந்திராவில் விஜய்க்கு ரசிகர் பல உள்ளது. இன்னும் சொல்லப் போனால் விஜய்க்கு வட இந்தியாவில் நல்ல மார்கெட் உள்ளது. விஜய்க்கு அடுத்து அல்லு அர்ஜுன் இருக்கிறார். இது எப்படி உருவானது என்பதை யூகிக்க முடியவில்லை. ஒருவேளை அவர் அரசியலுக்குப் போய் மோதி பார்த்துவிட்டு, மீண்டும் சினிமாவுக்கு தான் வந்தாக வேண்டும். அப்படி வந்தால் அவரது சம்பளம் குறையாது. 300 கோடியாக அது உயரலாம். இறங்காது.












Click it and Unblock the Notifications