மீடியாவா இருந்தாலும் நோ.. வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போனுக்கு தடா! தேர்தல் ஆணையம் உறுதி!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8:30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு வர கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களாகவே இருந்தாலும், மீடியா ரூமுக்குள் மட்டுமே செல்போனுக்கு அனுமதி எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கேமராவை மட்டுமே கொண்டு செல்ல வேண்டுமென அதிகாரிகள் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

அதில் பதிவான வாக்குகள், தற்போது பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் நாளை வெளிவரவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திம் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்த பணிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியுக்கும் தனித்தனி வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால் வாக்குகளுக்காக கூடுதலாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்கள்
மொத்தம் 3,324 மேஜைகள் வாக்கு எண்ணும் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பணிகளை மேற்கொள்ள 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 4,624 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை சீராக நடைபெறுவதற்காக 234 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. கூடுதலாக 1,135 உதவி தேர்தல் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுகின்றனர்.
செல்போனுக்கு தடை
இந்த முழு செயல்முறையும் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாருக்கும் இந்த விதிமுறையில் விலக்கு இல்லை. செய்தியாளர்களுக்குக் கூட, மீடியா அறைக்குள் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மையத்திற்குள் கேமரா மட்டும் கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
க்யூஆர் குறியீடு
பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகக் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதல் முறையாக க்யூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி பெற்றவர்களுக்கே உள்ளே செல்ல வாய்ப்பு வழங்கப்படும்.
போலீஸ் பாதுகாப்பும் மாநிலம் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் கண்காணிப்பு
இதற்கு மேலாக துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாளை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications