கேரளா பாணியில் தமிழக அரசு.. மோட்டார் வாகனங்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு.. பின்னணி என்ன?
சென்னை: சாலையில் ஓடி கொண்டிருக்கும்போது திடீரென்று வாகனங்கள் தீப்பற்றி எரியும் விபத்தை தடுக்க தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கமிஷனர் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். இதன்படி ஆர்.டி.ஓ. அனுமதியின்றி வாகனங்களில் புதிய மாற்றம் செய்ய முடியாது.
வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. வாகனங்கள் இப்படி திடீரென தீப்பிடித்து எரிவதால், அதில் பயணிக்கும் பயணிகள் சில நேரங்களில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் தான் இதுபோன்று தானாக தீப்பிடித்து எரிகின்றன.

அண்மையில் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கார் தீப்பற்றி எரிந்தது. திடீரென்று கார் தீ பிடித்து எரிந்ததை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் செல்லும் பாதசாரிகள் பீதி அடைந்தனர்.
இந்த நிலையில் மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் விபத்துக்கள் குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இந்த விபத்துக்கான காரணமும் கண்டறியப்பட்டுள்ளது. வாகனங்களில் புதிய மாற்றம் செய்வதே காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அனுமதியின்றி வாகனங்களில் புதிய மாற்றம் செய்ய முடியாதபடி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தமிழக அரசு.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: " அண்மைக் காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத சி.என்.ஜி./எல்.பி.ஜி. (கியாஸ்) மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் வாகனங்களில் புதிய மாற்றம் செய்ய முடியாது. புதிய வாகனம் பதிவு செய்யும் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்க வேண்டும்... மீறினால் அபராதம் விதிக்கப்படும். அதே பாணியில் தமிழக அரசு வாகனங்களில் மாற்றம் செய்ய தற்போது கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications