மின்சார வாரியத்துக்கு அரசு அலுவலகங்களின் "கரண்ட் பில்" செக்.. தமிழக அரசின் மொட்டை மாடி மாஸ்டர் பிளான்
சென்னை: அரசு அலுவலகங்களின் மின் கட்டண சுமையை குறைக்க 20 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை பசுமை எரிசக்தி கழகம் சென்னையில் விரைவில் தொடங்க போவதாக தகவல் ஒன்று பரபரபத்து வருகிறது.. இந்த திட்டத்தின் குறிக்கோள் என்ன? பலன் என்ன? மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..
தமிழக அரசு அலுவலகங்களின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஒரு புதிய முயற்சியை பசுமை எரிசக்தி கழகம் கையில் எடுத்துள்ளது..

பொதுவாகவே அரசு அலுவலகங்களில் மின்சார கட்டணம் சரியாக செலுத்தப்படுவதில்லை என்கிற ஒரு குறை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. பல அலுவலகங்களில் லட்சக்கணக்கில் மின் கட்டணம் நிலுவையிலும் உள்ளது... இது அரசுக்குதான் சுமையை தந்து கொண்டிருக்கிறது..
தமிழக மின்சார வாரியம்
அதனால்தான், இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.. அலுவலகக் கட்டிடங்களின் மேற்கூரையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என மக்கள் அதிகம் வந்து செல்லும் கட்டிடங்கள் அனைத்திலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட உள்ளதாம்..
அரசு அலுவலகங்கள் மொட்டை மாடி
இதில் மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அரசு மருத்துவமனைகளுக்கு அதிக முன்னுரிமை தரப்படுகிறது. காரணம், மருத்துவமனைகளில் இரவு பகலாக மின்சாரம் தேவைப்படும். அதேபோல மருத்துவமனை கட்டிடங்கள் பெரிய அளவில் இருப்பதால், அங்கு அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இப்படியெல்லாம் செய்வதன் மூலம், மருத்துவமனைகள் மின்சாரத்திற்கு மற்றவர்களை எதிர்பார்க்காமல் தற்சார்பு அடைய முடியும் என்பதால்தான்..
சரி, இந்த திட்டம் எப்படி செயல்பட போகிறது? இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களே, அதற்கான கருவிகளை பொருத்தி 25 வருடங்களுக்கு பராமரிக்கவும் வேண்டுமாம்..
ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகடுகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த அலுவலகங்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
கரண்ட் பில் - பசுமை எரிசக்தி கழகம்
ஒருவேளை மின்சாரம் மீதம் இருந்தால், அதை தமிழக மின்சார வாரியம் வாங்கிக் கொள்ளும். இதற்காக பசுமை எரிசக்தி கழகம் அந்த நிறுவனங்களுக்கு உரியத் தொகையை வழங்கும். இதனால் அரசுக்குப் பணமும் மிச்சமாகும், மின்சாரமும் தடையின்றி கிடைக்கும்.
எனவே, முதற்கட்டமாக சென்னையில் மட்டும் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. எந்தெந்தக் கட்டிடங்கள் இதற்கு வசதியாக இருக்கும் என்று கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது கட்டுமான பணிகள் ஆரம்பமாகி விட்டதாம்..
தமிழக அரசு மாஸ்டர் பிளான்
இன்னும் சில காலத்திற்குள் இந்த பணிகள் மொத்தமும் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்... இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி தந்துள்ளார்கள்..
அதுமட்டுமல்ல, இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, அரசு அலுவலகங்களின் மின்சார கட்டண பிரச்சினையும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தலைமை செயலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் இன்றைய நாளின் ஹைலைட் சமாச்சாரமாகும்...!!












Click it and Unblock the Notifications