சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம்.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை : ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது தன்னிச்சையான அமைப்பிம் விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய NSUI தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோர் கேரளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாலும், தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக தலைவர் என்.அஸ்வத்தமன் பொது நல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அமைப்பு அரசியல் கட்சியை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என எப்போது மனு கொடுக்கப்பட்டது என்றும், அதற்கான அத்தாட்சி நகல் எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் நவம்பர் 18ல் புகார் அனுப்பியதாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கை இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு தள்ளுபடி செய்தது..












Click it and Unblock the Notifications