ஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள்
சென்னை: முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் கிளப்பி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யாருமே ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இதேபோல் இடதுசாரிகளும் பங்கேற்கவில்லை.
Recommended Video
ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆளுநர் ரவியின் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
கே.எஸ்.அழகிரி கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னாவைச் சேர்ந்த இவர், 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார். முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட அவரை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

கிரண்பேடி
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். உதாரணத்துக்கு, முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது. அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைச் செயல்படவிடாமல் நித்தம் இடையூறு செய்து மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை, கடும் எதிர்ப்பு காரணமாக மோடி அரசு திரும்பப் பெற்றது.

நேர்மையான ஆட்சி
அந்தவகையில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் தொட்டிலாக கருதப்படுகிற தமிழகத்தில், வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ? என்று நான் சந்தேகப்படுகிறேன்.

மோடி அரசு
தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக ஆளுநர் நியமனத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசியல் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்கவும் முயல்கிறது. இதற்காக ஆர்.என்.ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டில், நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.

புதுச்சேரி
புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி செய்த இடையூறுகளால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனது. மாநில அரசின் வளர்ச்சிக்காக முன்னே நிற்க வேண்டிய ஆளுநரே, தடைக்கல்லாக இருந்ததைப் புதுச்சேரியில் பார்த்தோம். அதேபோன்ற நிலை தமிழகத்திலும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

யார் இவர்
சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.என்.ரவி.

போராடுவோம்
இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்" என்று கே.எஸ். அழகிரி கடந்த வாரம் கூறியிருந்தார்.

ஆளுநர் ரவி
இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், தமிழக கவர்னராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு, ஸ்டாலின் புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். சஞ்சீப் பானர்ஜி, ரவி மற்றும் அவரது மனைவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இடதுசாரிகள் புறக்கணிப்பு
சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை, புதிய கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் வாசன், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே. மணி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தி.மு.க., எம்.பி., கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் காங்கிரஸ் சார்பில் யாருமே பங்கேற்கவில்லை. ஆளுநர் பதவியேற்பு விழாவை தமிழக காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. இதேபோல் இடதுசாரிகளும் புறக்கணித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications