என்னை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கிறார்களே... வைகோ கடும் வேதனை
சென்னை: தாம் வாரிசு அரசியலை வளர்ப்பதாக அர்த்தமே இல்லாமல் விமர்சிக்கின்றனர் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ சென்னையில் இன்று கூறியதாவது:
ஒன்றிரண்டு ஏடுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கின்றன. அது அவர்கள் உரிமை. ஆனால், நான் எடுத்த முடிவுகளால் கட்சி பலவீனம் அடைந்தது என்று, தவறான தகவல்களை அந்த ஏடுகள் தருகின்றன. எங்கள் கட்சியின் முடிவு, நான் அமைச்சர் ஆக வேண்டும் என்பது. ஆனால், என்னுடைய முடிவால்தான், கண்ணப்பன், செஞ்சி இராமச்சந்திரன் ஆகியோர், மத்திய அமைச்சர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இரண்டு முடிவுகள்தான் நானாக எடுத்தவை. ஒன்று, அமைச்சர் ஆவது இல்லை. பொடா சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த நிலையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், 5 இலட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெறலாம் என்ற நிலையில், அந்தத் தேர்தலில் நான் போட்டி இடுவது இல்லை என்று தீர்மானித்தேன். இந்த இரண்டும்தான், நான் எடுத்த முடிவுகள். மற்ற அனைத்து முடிவுகளும், காலை தொடங்கி இரவு வரை, மறுநாள் விடியற்காலை வரையிலும்கூட, இதே அரங்கில் கருத்துகளைப் பரிமாறி, ஒட்டுமொத்தமாக, ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான். எங்கள் கட்சியில் கருத்து உரிமை இருக்கின்றது.
பொதுவாழ்வில் என்னை விரும்புகின்றவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். வெறுப்பவர்களும் இருக்கின்றார்கள். ஏனோ என் மீது கசப்பு உணர்வு கொண்டு இருக்கின்றார்கள். அது அவர்களுடையை உரிமை. ஆனால், இந்த இயக்கம், என் உயிரை விடமேலானது. 26 ஆண்டுகளாக, இலட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால், கட்டிக் காக்கப்படுகின்ற இயக்கம். இந்த இயக்கத்தைப் பாதுகாப்பவர்கள் தொண்டர்கள். அவர்களுடைய உணர்வுகளைத்தான், தலைமை எதிரொலிக்கின்றது. அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான், நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தோம்.
மாநிலங்கள் அவைத் தேர்தல் குறித்து நேற்று ஏற்பட்ட சூழல் குறித்து, உடனடியாக விளக்கம் அளிக்காவிட்டால் விரும்பத்தகாத விமர்சனங்கள் எழும் என்பதால்தான், நான் நேற்று நான் உடனடியாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தேன்.
நான் எனக்குப் பதவி கேட்பவனா? அப்படியானால், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால், அதன்பிறகும் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி இருந்திருக்கலாமே? அதற்கான வாய்ப்புகள் இருந்தனவே? 1998 இல் என்னை அமைச்சர் ஆகச் சொன்னார் வாஜ்பாய்; 99 இலும் சொன்னார். இரண்டு முறையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு முன்பு, 1989 லேயே வி.பி. சிங் அவர்கள், உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னார். அதையும் மறுத்து விட்டேன். இந்த வழக்கில் எனக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை அளித்து இருந்தாலும், அதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவன் என்பதை, என்னுடைய தோழர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே, என் சுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை. இந்த முறை, உங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் யோசிக்ககூடாது என்று கட்சி முடிவு எடுத்தது. நீங்கள் செல்வதாக இருந்தால், மாநிலங்கள் அவைக்கு ஒரு இடம் தருகின்றோம் என்று சொன்னார்கள். இல்லை என்றால், மக்கள் அவையில் எத்தனை இடங்கள் என்பதைப் பேசி முடிவு செய்து இருப்போம். எனவே, கட்சியின் ஒட்டுமொத்தக் கருத்தின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதை விரும்புகின்றவன் நான். அமைச்சர்களாக ஆக்கி மகிழ்ந்தவன் நான். எம்.பி.க்கள் ஆக்கி மகிழ்ந்தவன் நான். தடா சட்டத்தின்கீழ், சிறையில் ஓராண்டு காலம் கைவிலங்கு பூட்டப்பட்டுக் கிடந்த என் தம்பி இரவிச்சந்திரனுக்குக் கட்சியில் நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லையே? எல்லா வகையிலும் எனக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என் மகன். அவரை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லையே? பதவி அரசியலை அவரும் விரும்பவில்லை; நானும் விரும்பவில்லை. எல்லோரையும் போல அவரும் வாட்ஸ் அப்பில் தன் நண்பர்களோடு ஒரு குழுவில் இருக்கின்றார். அதை வைத்துக்கொண்டு, அதற்குப் பெயர் எல்லாம் சூட்டி, அடுத்த கட்ட வாரிசு என்றெல்லாம் எழுவது வேதனை அளிக்கின்றது. அந்த எண்ணம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. எல்லாத் துன்பங்களும், துயரங்களும் என்னோடு போகட்டும். இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கின்றார்கள். எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். இதை எல்லாம் இன்றைக்கு மனம் திறந்து சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது.
எத்தனையோ ஈட்டிகள் பாய்ந்து என் இதயம் மரத்துப் போய்விட்டது. இனிமேலும் காயப்படுவதற்கு என்ன இருக்கின்றது? வருந்துவதற்கு ஒன்றும் இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications