யாருமே மிஸ் ஆகக்கூடாது.. ரூ.1000 உரிமைத் தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் அட்வைஸ்
சென்னை: மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த (7.7.2023) அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, "தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் நிலைபெறவுள்ள, ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை" என்ற திட்டத்தை அறிவித்தார்கள்.
இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 2023-2024-ஆம் ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" வழங்கும் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தினை செயல்படுத்துவதற்கான அரசாணை (நிலை) எண்:15, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை, நாள்: 10.07.2023 அன்று வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இன்று (17.07.2023 சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் அவர்கள் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்கு கண்காணிப்பு அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகள், நடவடிக்கைள் கண்காணித்து உறுதி செய்யபப்ட வேண்டும்.
விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் நடைமுறைகள், பொருளாதாரத் தகுதியின்மை, விண்ணப்பிக்கும் தகுதிகள் அரசாணையில் விரிவாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள, கால அட்டவணை, திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்கம், கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம் இடங்கள் தேர்வு, முகாம் நடைபெறும் நேரம் மற்றும் நாள்கள், உடனடியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல், முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களைப் பெற்றுச் சரிபார்த்தல் பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்ப்பு மற்றும் பகிர்ந்தளித்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு, நிழற்கூடங்கள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளக்கான வசதிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள், தீத்தடுப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது எனவும், திட்டப் பயனாளிகள் கண்டறியும் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், முதல் கட்டமாக 19.07.2023 அன்று கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று களஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications