"எந்த தொடர்பும் கூடாது".. அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய இபிஎஸ்!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அக்கட்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டு இருக்கிறார். கட்சியின் முடிவிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அதிமுக தலைமை தற்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து அதிமுக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறி அதிமுகவில் ஆங்காங்கே சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சி சந்திரசேகரன் போன்றவர்கள் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளனர்.

எதிர்ப்பு
பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அதிமுக எதிராக தற்போது களமிறங்கி உள்ளது. 2011 மற்றும் 2016ல் பெருந்துறை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். அமைச்சராக இருந்த தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திற்கு இந்த முறை அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு இல்லை
அதிமுகவில் இவருக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தற்போது இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக இவர் களமிறங்க முடிவு செய்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு எதிராக பெருந்துறையில் இவர் தனியாக களமிறங்குகிறார். இதற்காக பெருந்துறையில் வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார்.

பெருந்துறை
பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக மனுதாக்கல் செய்ததால் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கபட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுகிறார். கட்சியின் முடிவை மதிக்கவில்லை. இதனால் இவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு
இவருடன் யாரும் தொடர்பு வைக்க கூடாது என்று கட்சி தலைமை கூறியுள்ளது. இதேபோல் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சி சந்திரசேகரனும் அதிமுக வேட்பாளருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளார். சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் சேகரை எதிர்த்த சி சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். கட்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் இப்படி மனுதாக்கல் செய்தார்.

வாய்ப்பு
இதனால் இவரும் விரைவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. கட்சியின் முடிவிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. அதன் முதல் கட்டமாக தோப்பு வெங்கடாசலம் நீக்கம் பார்க்கப்படுகிறது. கட்சிக்கு எதிராக செயல்படும் நபர்கள் வரிசையாக அதிமுகவில் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications