"ஊழல் புகாரில் முகாந்திரமே இல்லை.." எடப்பாடிக்கு சர்டிபிக்கேட் கொடுத்த தமிழக அரசு! என்ன மேட்டர்?
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி மீதான ஊழல் புகாரில் முகாந்தரம் இல்லை எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் தரப்பட்டது. அதன்படி திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு
அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசமே அப்போது பொதுப் பணித் துறையும் இருந்தது. அப்போது கட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவில்லை என்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த விவசாயி என்.ராஜசேகரன் குற்றஞ்சாட்டியிருந்தார். மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய அரசு நிதி
பிரதமரின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இதனால் மருத்துவக் கல்லூரிகள் கட்டுமானத்திற்குச் சுமார் 60% நிதியை மத்திய அரசே கொடுத்திருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், மத்திய அரசு நிதி பங்களிப்பு இருப்பதால் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.
மாநிலத்தில் எழும் ஊழல் புகார்கள் குறித்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரிக்கத் தரப்பட்டிருந்த அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்திருந்தது. அதையும் சுட்டிக்காட்டிய மனுதாரர், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.
தமிழக அரசு
இந்த வழக்கு இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணையை நடத்தியது. இருப்பினும், அந்தப் புகாரில் முகாந்தரம் இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது" என்று கூறியிருந்தார்.
அப்போது நீதிபதிகள், முகாந்தரம் இல்லை என முடித்துவைக்கப்பட்டப் புகார்களை நீதித் துறை ஆய்வு செய்யலாமா என்பது குறித்து, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கம் தருமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு அவர் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications