டிராபிக் சிக்னலில் இளையராஜா பாட்டு கேட்டீங்கல்ல! இனி கிடையாதாம்! புதிய கமிஷனர் அதிரடி! ஏன் தெரியுமா?
சென்னை: சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்துமாறு புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் குறித்த நேரத்தில் போக வேண்டிய இடங்களுக்குச் செல்லவும் வாகன ஓட்டிகள் வேகத்தை ஆயுதமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அதிலும் சைக்கிள் கேப் இருந்தாலும் அதிலும் முண்டியடித்துக் கொண்டு நுழைய முயற்சிப்பதாலும் நிறைய இன்னல்கள் ஏறப்டுகின்றன. மேலும் சிக்னல்களில் மஞ்சள் விளக்கு எரியும் போது கூட வாகனத்தை இயக்கி வருகிறார்கள்.
சில நேரங்கள் பச்சை விளக்கு எரிந்தாலும் வாகனத்தை இயக்குவதை விடுவதே இல்லை. சிக்னலில் போலீஸார் இல்லாவிட்டால் இவர்களுக்கு வெல்லம்தான். அதிலும் ஆம்புலன்ஸ் வாகனம் வரும் போது அதற்கு வழிவிடாமல் போக்குவரத்தை அடைத்துக் கொள்வர். சில நொடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை போக்குவரத்தில் காத்திருப்பது என்பது சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
இது போல் வாகன ஓட்டிகளின் அவதியுறுவதை தடுக்கும் பொருட்டு சிக்னலில் காத்திருப்பவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தன. இளையராஜாவின் பாடல்களும் சில கரோக்கிகளும் ஒலிக்கப்பட்டு வந்தது. இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் அவசரப்படாமல் டென்ஷன் இல்லாமல் அந்த பாட்டை ரசித்து வந்தனர்.
சிலர் கூடவே சேர்ந்து பாடியும் வந்தனர். பாட்டை கேட்பதற்காகவே சிக்னலில் சிலர் நின்றிருந்தனர். சென்னையில் இந்த முறை அமலான நிலையில் கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கு ஏகோபித்த பாராட்டுகள் காவல் துறைக்கு கிடைத்தது.
இந்த பாடல்களுக்கு இடையே தலை கவசம் அணிதல், சாலை விதிகளை பின்பற்றுதல், தேவையில்லாத விஷயங்களுக்கு காரை பயன்படுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்தல் போன்ற விளம்பரங்களும் காவல் துறையினரால் வெளியானது. எனினும் இந்த நடைமுறை சில வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் எதிர்த்தனர்.
காற்று மாசுவால் அவதிப்பட்டு வரும் நிலையில் வாகன இரைச்சலுடன் பாட்டு சப்தமும் இருப்பதால் அவர்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை என்கிறார்கள். மேலும் சிலர் பாட்டு சப்தத்தை குறைக்குமாறும் போலீஸாரிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து சந்தீப் ராய் ரத்தோர் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். அவர் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் காவலர்கள் பணி நேரத்தின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனால் கவனச்சிதறல் ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஒலி மாசு ஏற்படுவதால் பாடல்களை ஒலிக்க விட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சிக்னலில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications