ஒடிசா ரயில் விபத்து கொடூரம்.. அந்த 6 தமிழர்களின் நிலை என்ன! அமைச்சர் உதயநிதி சொன்ன பரபர தகவல்
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.. இதற்கிடையே ஒடிசாவில் இருந்து திரும்பிய அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்து அங்குள்ள நிலை குறித்து விளக்கினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து நடந்தது. இதில் சுமார் 20 நிமிடங்களில் 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. சமீப காலங்களில் நாட்டில் அரங்கேறிய மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது இருக்கிறது.

இதுவரை 290க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் இதில் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சர்கள்: இதற்கிடையே விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ஒடிசா முதல்வரைத் தமிழ்நாடு அமைச்சர் தொடர்பு கொண்டு பேசினார். ஒடிசா விபத்தில் தேவையான உதவிகளைச் செய்யவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் தலைமையிலான குழு ஒடிசா விரைந்தது. அங்கே அவர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்டனர். இதனிடையே அமைச்சர்கள் இப்போது சென்னை திரும்பியுள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டிற்கு வரும் ரயில் என்பதால் இதில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் பரவியது. இருப்பினும், ஒடிசா சென்ற தமிழ்நாடு அரசின் குழு அதை மறுத்திருந்தது. தமிழர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் எட்டு பேரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை திரும்பிய உதயநிதி இது குறித்தும் விளக்கமளித்தார். மேலும், அங்கே மேற்கொண்டு வரும்
யாருக்கும் பாதிப்பு இல்லை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, "ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை... தமிழர்கள் யாரும் இந்த விபத்தில் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். எங்களுடன் வந்த அதிகாரிகள் இன்னும் ஒடிசாவில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து வரும் காலங்களில் கூடுதல் தகவல்கள் தெரிய வரும். ரயிலில் பயணித்த ஆறு பயணிகளை மட்டும் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்கள் நிலை குறித்து அறிய முயற்சி நடைபெற்று வருகிறது.. கூடுதல் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்.
உரிய நடவடிக்கை தேவை: ஒடிசா அமைச்சர்களிடம் பேசி தமிழர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தோம்.. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. எதிர்காலத்தில் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடக்கக் கூடாது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இந்த விபத்திற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். மேலும், இந்த ரயில் விபத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications