இனி தேவையில்லை..பாஜகவை கைகழுவும் முடிவுக்கு வந்துவிட்டாரா ஓபிஎஸ்? பரபரக்கும் ஆதரவாளர்கள்
பாஜகவை நம்பி பயன் இல்லை என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியிருந்த நிலையில், அவர் சொன்னது நடக்க தான் போகிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவை நம்பி பயன் இல்லை என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் எதை சொன்னாலும் சரியாக இருக்கும். பெரிய அரசியல் மாற்றங்களை நீங்கள் காணப்போகிறீர்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னது நடக்கத்தான் போகிறது என்று ஓபிஎஆஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார்.
அதிமுகவில் தலைமை பதவியைக் யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக ஒ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்களை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இது தொடர்பாக சட்ட போராட்டம் நடத்திய ஓபிஎஸ்க்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று அளித்த தீர்ப்பு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் சிவில் வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பை ஒரு கை பார்த்து விடுவோம் என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறி வந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் அணியினர் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

அண்ணன் என்று கூறி அறிக்கை
இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாவே ஓ பன்னீர் செலவ்ம் ஆதரவாளர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு விட்டு ஓ பன்னீர் செல்வத்தை அண்ணன் என்று கூறி வெளியிட்ட அறிக்கை அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. இதனால், அண்ணாமலையை கடுமையாக வசைபாட தொடங்கினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

பண்ருட்டி ராமச்சந்திரனின் கருத்து
ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதே கருத்தை பிரதிபலித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியல் விவகாரத்தில் இனி பாஜகவை நம்பக்கூடாது. 2024 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு. இனி ஒ பன்னீர் செல்வம் எப்படி வலுவாகி நமக்கு எப்படி பயன்படப்போகிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

பலவானாக காட்டவில்லை
ஆனால் ஓபிஎஸ் தன்னை நியாயவானாக காட்டினாரே தவிர பலவானாக காட்டவில்லை. ஆனால் இபிஎஸ் தன்னை பலவானாக காட்டுவதுடன், தன்னையே எம்ஜிஆர் ஆகவும் காட்ட முயற்சிக்கிறார். அதனால் இபிஎஸ்ஐ வைத்து தான் 2024 இல் நாம் தேர்தலை சந்திக்கனும், அவரை வலுப்படுத்துவதைத்தான் நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும் அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்று பாஜக குறித்து நேரடியாகவே பண்ருட்டி ராமசந்திரன் விமர்சித்து பேசியிருந்தார்.

பாஜகவை நம்பி பயன் இல்லை
இந்த நிலையில், பெரிய குளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜகவை நம்பி பயன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் எதை சொன்னாலும் சரியாக இருக்கும். பெரிய அரசியல் மாற்றங்களை நீங்கள் காணப்போகிறீர்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னது நடக்கத்தான் போகிறது" என்று கூறினார்.

பாஜகவை எதிர்பார்த்து கொண்டு இருந்தால்..
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே பாஜக இருப்பது சமீபத்திய சமிக்ஞைகள் உணர்த்துவதாக கூறும் அரசியல் நோக்கர்கள்... பாஜகவை இவ்வளவு காலம் நம்பியது போதும்.. இனியும் பாஜகவை எதிர்பார்த்து கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவை ஓபிஎஸ் எடுக்கக் கூடும் என்றும் அவரது அடுத்த கட்ட அரசியல் மூவ் அதை சார்ந்தே இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதையே அவரது ஆதரவாளர்ளின் கருத்து பிரதிபலிப்பதாகவும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications