மோடி முன்னிலையில் ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? அரசியல் சாசனத்திலேயே 'ஒன்றியம்' இருக்கு: ப.சிதம்பரம்
சென்னை: ஒன்றிய அரசு என்று சொல்வதில் தவறில்லை என்றும், பிரதமர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக தேவைகளை எடுத்துச் சொல்வது சரியானது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளையோடு வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. 3 ஆம் தேதி வேட்புமனுக்களை விலக்கிக் கொள்பவர்கள் விலக்கிக்கொள்ளலாம். 3 ஆம் தேதி மாலைதான் தேர்தல் உண்டா இல்லையா? என்பது தெரியும். அது தெரிந்த பிறகு உங்களை எல்லாம் நான் விரிவாக சந்திக்கிறேன்." என்றார்.

அமலாக்கத்துறை, சிபிஐ
அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதற்காகவே ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறதே.. என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிதம்பரம், "புலானாய்வுத்துறை, அமலாக்கத்துறை குறித்தெல்லாம் நான் புதிதாக கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 2 நாட்களுக்கு முன் ஷாரூக் கான் மகனின் வழக்கு எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்." எனக்கூறினார்.

காங்கிரஸை பார்த்து பயம்
உங்களை பார்த்து பயப்படுகிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம் "என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா அல்லது புலியா? நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக எடுத்துச் சொல்லி வருகிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஒன்றிய அரசு
பிரதமர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக தேவைகளை எடுத்துச் சொல்லியது சரியானது. ஸ்டாலின் பேச்சை விமர்சனம் செய்வது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. யூனியன் கவர்ன்மென்ட் என்பது அரசியல் சாசனத்தில் உள்ள வார்த்தை. ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை." என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications