விடை பெறும் வடகிழக்குப் பருவமழை..இனி வறண்ட வானிலைதான்.. நீலகிரியில் உறைபனி
சென்னை: வடகிழக்கு பருவமழை 12.01.2023 அன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 44.3 செமீ மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 44.5 செமீ பதிவானது. இது வழக்கத்தை விட 1 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் மழையில்லை மாறாக மாலை நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனிடையே இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. இன்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications