சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை முயற்சி செய்த தாய்.. இரு குழந்தைகள் பலி
சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுக்கை அறையில் சிலிண்டருக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்சூர் (40). சென்னை மணலியில் உள்ள சின்னசேக்காடு பகுதியில் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்.

புதுவண்ணாரப்பேட்டை உள்ள தனியார் குடியிருப்பில் மனைவி ரிம்ஜிம் (28) மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.. இன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் இருந்த சிலிண்டரை எடுத்து வந்து படுக்கை அறையில் தீ வைத்து விட்டு ரிம்ஜிம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், எதிர்பாராதவிதமாக தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பரவியது. இதனால் அவர்களது 4 வயது குழந்தை மற்றும் 8 மாத குழந்தையும் தீ விபத்தில் சிக்கினர். பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தையும், 8 மாத குழந்தையும், உயிரிழந்த நிலையில் ரிம்ஜஇம்(28) மட்டும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications