சென்னையில் பட்டினிச் சாவு! 3 நாளாக உணவின்றி தவித்த வடமாநில இளைஞர் பலி! மயங்கி கிடந்த 4 பேர் மீட்பு
சென்னை: சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர் 3 நாட்களாக தவித்து வந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பட்டினி கிடந்த மேலும் 4 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மித்னாபூர், மங்குருல் ஆகிய பகுதிகளை சேர்ந்த சமர்கான் உள்பட 5 தொழிலாளர்கள் கடந்த 13 ஆம் தேதி சென்னைக்கு வந்தனர். இவர்கள் வேலை தேடி வந்ததாக தெரிகிறது.

இவர்கள் தங்குவதற்கு இடம் ஏதும் இல்லாததால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தங்கிவிட்டனர். அங்கு நடைமேடையில் 5 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இது குறித்து பொதுமக்கள் அங்குள்ள போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து பார்த்த போது சமர்கான் என்ற 35 வயது இளைஞர் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் மீதமிருந்த 4 பேரையும் மீட்டு எதிரே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது உணவின்றி தவித்ததால் நடந்த நிகழ்வு என்பதால் பட்டினிச் சாவு என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications