இன்று காற்று செமையாக வீசும்.. மழை இங்கெல்லாம் பெய்யும்.. பாலச்சந்திரன் அறிவிப்பு
சென்னை: வட தமிழகத்தில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில், இன்று பாலச்சந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஃபனி புயல் இன்று அதிகாலை, அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில், சென்னையில் இருந்து சுமார் 525 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து பலம் பெற்று வடமேற்கு திசையில் நாளை மாலை வரை நகர்ந்து சென்று, அதன் பிறகு வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்றை பொறுத்தளவில், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், நாளை தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மே 2 தேதி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்திய பெருங்கடலை பொருத்தளவில் ஏழு பருவங்கள் உண்டு. ஏப்ரல்-மே காலகட்டத்திலும் புயல்கள் உருவாகலாம். அக்டோபர், நவம்பர் மாதங்களில் உருவாகலாம். இது இயல்பானதுதான்.
தமிழகத்தில், கோடை மழையை பொறுத்தளவில் முன்கூட்டியே கணிக்க முடியாது. புயல் கரையை கடந்த பிறகு அது குறித்து நாம் பார்க்கலாம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications