வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் 4% கூடுதல் - 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நிவர், புரேவி புயல்களின் புண்ணியத்தால் வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 4 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் முழுவதும் நிவர் மற்றும் புரேவி புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவியது.
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்கி மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின.
டிச. 16-க்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மழை.. வானிலை மையம்
புயல்களால் கொட்டிய மழை
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் கடுமையான மழை கொட்டித்தீர்த்தது. அடுத்தடுத்து உருவான நிவர், புரேவி புயல்களால் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
விளைநிலங்களில் வெள்ளம்
பல மாவட்டங்களில் விளைநிலங்களில் சூழ்ந்த வெள்ளம் வடியவே இல்லை. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்கள் விட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதலே பல மாவட்டங்களில் சாரல் மழையும், கனமழையும் பெய்துவருகிறது.
மழை நீடிக்கும்
இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
லேசான மழை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
வடகிழக்குப் பருவமழை கூடுதல்
வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 4 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழைபெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.