டக்குனு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பும் வடமாநில தொழிலாளர்கள்.. என்னவா இருக்கும்? இது மேட்டரே வேற
வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறது பீகார் அதிகாரிகள் குழு
சென்னை: ஹோலி கொண்டாட வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் இருந்து தங்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர் வேலை தேடி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருகின்றனர். தங்கள் மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்பு மற்றும் கூலியும் வேலைக்கு ஏற்றார் போல கிடைப்பதால் இவர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இவர்களது வருகையை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் வடமாநில தொழிலாளர்கள் மீது வெகு சில தாக்குதல் சம்பவங்கள் சொந்த பிரச்சினைகள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ பதிவாகியுள்ளன. அதேநேரம் காவல் துறையும் இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாட்டில் வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோ தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, பீகார, உத்தரப் பிரதேச மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜக கொந்தளிப்பு
பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜக, இந்த வீடியோவை ஆதாரமாக காட்டி தங்கள் மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதனை பீகார் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த வீடியோ தொடர்பாக ஏற்கெனவே காவல்துறை 'இந்தியிலேயே' விளக்கமளித்திருந்தது. அதாவது "சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வரும் இந்த வீடியோக்களில் ஒன்று பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்களின் மோதல். மற்றொன்று தமிழ்நாட்டின் உள்ளூர் மக்கள் மோதல். எனவே இரண்டு வீடியோக்களும் போலியானவை. இதனை யாரும் ஷேர் செய்ய வேண்டாம்.

காவல்துறை வார்னிங்
தமிழ்நாடு அனைத்து குடிமக்களின் உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த எச்சரிக்கையை மீறி வீடியோக்களை ஷேர் செய்யும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது. ஆனாலும் பீகார் பாஜக இதனை ஏற்றுக் கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநில காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார். இதனையடுத்து இந்த குழு இன்று தழிழ்நாட்டுக்கு வருகிறது.

வெளியேறும் தொழிலாளர்கள்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே தாங்கள் வைத்த குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையென நிரூபணமாகியுள்ளது என பீகார் மாநில பாஜக கூற, தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆழமான விமர்சனத்தை முன்வைக்க தொடங்கியுள்ளனர். சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களிடம் இது குறித்து கேட்டதற்கு ஹோலி கொண்டாட ஊருக்கு செல்வதாக கூறுகின்றனர்.

பாதுகாப்பு
மேலும், "தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஊர். இங்கு எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஹோலி பண்டிகை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்புவோம்" என்று கூறியுள்ளனர். வட இந்தியாவில் ஹோலி ஒரு முக்கியமான பண்டிகையாகும். இப்பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த வட இந்தியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications