தாசில்தாருக்கே சீட் இல்லையா.. ஜாதி வன்மம் எப்படி ஊறிப்போயிடுச்சி பாருங்க.. அண்ணாமலை ஆவேசம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Recommended Video
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பதில் சொல்லுங்க அண்ணாமலை! திமுக இல்லையென்றால் உங்களுக்கு அந்தஸ்து ஏது? - கார்த்திகேய சிவசேனாபதி
நலதிட்ட நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில், சட்டமன்ற உறுப்பினர், கோட்டாட்சியர், ஊராட்சிமன்ற தலைவர், துணை வட்டாட்சியர் மற்றும் இதர திமுக பிரமுகர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கருத்து
விழா முடியும் வரையிலும் கண்ணன் கைகளை கட்டியவாறு மேடையில் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியது. வட்டாட்சியர் கண்ணன் பட்டியலினத்தை சார்ந்தவர் என்பதால்தான் அவருக்கு இருக்கை வழங்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பினர். இதனையடுத்து இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுக்க இருக்கை
இது குறித்து அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, "திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த திமுகவினருக்குக் கூட இருக்கை வழங்கப்பட்டது.
பதில் என்ன?
ஆனால், அரசு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கை இல்லை. சமூகநீதி, சமத்துவம் எனப் போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் என்ன?" என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று முதலமைச்சர் நேரில் சென்று உறுதியளித்த பின்னரும் அது போன்ற வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லையென குற்றச்சாட்டு மேலெழுந்தது. இதனையடுத்து தற்போது வட்டாட்சியருக்கு இருக்கை அளிக்கப்படாத விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது.