அலங்கோலமான அதிமுக.. மெயின் காரணமே சசிகலா செய்த "அந்த" தவறுதான்.. ரூட்டை மாற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்
சென்னை: அதிமுக பொன்விழா நிறைவு ஆண்டு விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பிளவு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எப்படி உட்கட்சி குழப்பம் ஏற்பட்டதோ, அதேபோல மீண்டும் இப்போது உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அதிமுக பிளவுபட்டு இப்போது இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று அக்கட்சியே பிளவுபட்டு இருக்கிறது.

அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அதிமுக ஒரு வழியாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமையில் இயங்கியது. இருப்பினும், அந்த சமயத்தில் அவர்களால் பெரிதாகச் சொல்லக் கூடிய அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக அப்போதே இரு தரப்பிற்கும் இடையே பூசல் இருந்தது. இருப்பினும் அதை யாரும் வெளிப்படையாகக் கூறவில்லை.

உட்கட்சி விவகாரம்
இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்தது. அதிமுக ஒரே தலைமையின் கீழ் இயங்கினால் தான், சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியும் என்றும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூற தொடங்கினர். இருப்பினும், ஓபிஎஸ் முதலில் இதை ஏற்காமல் கூட்டுத் தலைமை தான் கட்சிக்குத் தேவை என்றார்.

இரு பிரிவு
அதை எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருத தரப்பும் எதிர் தரப்பினரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக மாறி மாறி அறிவித்தனர். அப்போது முதலே இரு தரப்பும் தனித்தே இயங்கி வருகிறது.

ஆலோசனை
இரு தரப்பும் மற்ற தரப்பைத் தொடர்ந்து சாடி வருகின்றனர். இதற்கிடையே அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழாவைப் பிரம்மாண்டமாக நடத்த இரு தரப்பும் திட்டமிட்டு உள்ளது. இதன் காரணமாக இரு தரப்பு ஆதரவாளர்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் நேற்றைய தினம் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

பொன் விழா
மயிலாடுதுறையில் அதிமுக ஓபிஎஸ் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. அதில் வரும் அக்.17ஆம் தேதிக் குத்தாலத்தில் நடைபெறும் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் பொன் விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், ஓபிஎசுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காரணமே சசிகலா தான்
இதற்கிடையே கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் எப்போதும் இடைக்கால முதல்வராக ஓ.பி.எஸ் தான் இருப்பார் என்றார். மேலும், சசிகலா செய்த தவறால், எடப்பாடியால் இன்று கட்சி அலங்கோலமாகி இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் மீண்டும், ஓபிஎஸ் தலைமையில் கட்சி இயங்கும் என்றும் மீண்டும் தமிழக முதல்வராக ஓபிஎஸ்தான் வருவார் என்றும் தெரிவித்தார்.

பரபரப்பு
கட்சியில் இப்போது பெரும்பாலான ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கமே உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை எதிர்கொள்ள ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் அதிமுக தற்போதைய நிலைக்கு சசிகலாவே காரணம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரே கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications