"காசா போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை! மோடியும் தான் காரணம்.." பிரகாஷ் ராஜ் ஆவேசம்
சென்னை: காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நடந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். காசா போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இந்தப் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை என்றும் இதை ஆதரிக்கும் அமெரிக்காவும், அமைதியாக இருக்கும் பிரதமர் மோடியும் கூட காரணம் என விமர்சித்தார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலரும் உயிரிழந்துவிட்ட போதிலும். இஸ்ரேல் போரைத் தொடர்ந்து வருகிறது. இதனால் காசாவில் கடந்த பல காலமாகவே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

காசா போர்
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்தத் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள அப்பாவி மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் இழந்து அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காசா போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தினாலும் இஸ்ரேல் அதைக் கேட்பதாக இல்லை. தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
பிரகாஷ் ராஜ் பேச்சு
இதற்கிடையே காசா போரைக் கண்டித்தும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடந்தது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், காசா போருக்கு எதிராகக் குரல் கொடுக்காத அனைவருமே போர் தொடர காரணம் என்றார்.
அவர் மேலும் பேசுகையில், "ஒரு அநியாயத்திற்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால்.. நாங்கள் அரசியல் தான் பேசுவோம். ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள்.. ஒரு நாள் போர் முடிந்துவிடும்.. தலைவர்கள் எல்லாம் கைகுலுக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். ஆனால், போர் நடந்த இடத்தில் ஒரு தாய் தனது மகனுக்காகக் காத்திருப்பார். ஒரு பெண் தனது கணவனுக்காகக் காத்திருப்பார். குழந்தைகள் அவர்களின் தந்தைக்காக காத்திருக்கும்.
விலை கொடுப்பது யார்?
இந்த நாட்டை மண்ணை விற்றது யார் எனத் தெரியாது.. ஆனால், அதற்கு விலை கொடுத்தது யார் எனத் தெரியும் என்பார்கள். அதுபோல தான் நாம் மவுனமாக இருந்தால் பாதிப்புகள் மோசமாகவே இருக்கும். நான் இங்கு இன்னொரு கவிதையைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு கவிஞன் சொன்னான்.. எனது கவிதைகளில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் எனக்குக் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும் என்கிறான் அந்தக் கவிஞன்!
மோடியும் காரணம்
ஒரு மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் மவுனமாக இருந்தால் கூட அது சரியாகிவிடும். ஆனால், ஒரு நாட்டிற்கு நாட்டு மக்களுக்குக் காயம் ஏற்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருந்தால் அந்தக் காயம் அதிகரிக்கவே செய்யும். எனவே, நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம்.. மவுனமாக இருக்கும் மோடியும் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications