வேலூரில் நோட்டா வைத்த வேட்டு.. திமுக வெற்றி வித்தியாசத்தைவிட அதிகம் ஓட்டு நோட்டாவுக்குதான்
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வாக்கு வித்தியாசத்தைவிட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளது, அரசியல் பிரமுகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 46.51, திமுக பெற்றது 47.30 சதவீதம். இரு கட்சிகளும் முறையே, 4,77,199 மற்றும் 4,85,340 வாக்குகளை பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி பெற்ற ஓட்டுக்கள், 26,995. நோட்டா பெற்ற வாக்குகள், 9417 ஆகும். அதாவது, 0.92 சதவீதம். கிட்டத்தட்ட 1 சதவீத ஓட்டுக்கள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.
எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றுதான் நோட்டாவை தேடுகிறார்கள் வாக்காளர்கள். கடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலை விட நோட்டாவை நாடியோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதற்கு காரணம், திமுக, அதிமுக கூட்டணியை தவிர, டிடிவி தினகரனின் அமமுக கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற பல வாய்ப்புகள் வாக்காளர்களுக்கு இருந்தன.
வேலூரில், அதிமுக, திமுக, நாம் தமிழர் என மும்முனை போட்டி நிலவியது. இதுவும் நோட்டாவை நோக்கி அதிக வாக்காளர்கள் திரும்ப காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக இந்த வாக்குகளை பார்த்தால் அதிமுக தரப்புதான் அதிகம் டென்ஷன் ஆகக்கூடும். ஏனெனில், அதிமுக கூட்டணி வேட்பாளர் தோற்ற வாக்கு எண்ணிக்கையைவிட நோட்டாவுக்கு சென்ற ஓட்டு எண்ணிக்கை அதிகம் அல்லவா!