தமிழ்நாட்டில் ராமர் ஆட்சி வரும்..திருப்பரங்குன்றம் அயோத்தியா மாறினா என்ன தப்பு – நயினார் நாகேந்திரன்
சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதமாகியுள்ளது. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்வதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தியாக மாறினால் தவறில்லை. என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "இந்தியா முழுவதும் அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக மரியாதை செலுத்தி வருகிறது. மத்திய அரசு அம்பேத்கரின் பிறந்த இடம், வளர்ந்த இடம், நினைவிடம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் அவரின் புகழை பரப்பும் வகையில் கட்டிடம் கட்டியுள்ளது.

அயோத்தி இந்தியாவில் தானே இருக்கு
வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றி பெற அம்பேத்கரின் நினைவிடத்தில் சபதம் ஏற்போம். தூத்துக்குடி விமான நிலைய நிலையத்தை கட்டியது மத்திய அரசு. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியது மத்திய அரசு. மதுரை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, சிங்கப்பூருக்கு விமானம் இருக்கிறது. இதில் எங்கு வளர்ச்சி இல்லை. திட்டங்களை நிறைவேற்றாதது மாநில அரசு தான். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று எப்படி சொல்ல முடியும்.
கோவை மதுரையில் மெட்ரோ தேவை இல்லை என்பதை போல தமிழ்நாடு அரசு அறிக்கை கொடுத்துள்ளது. பேருந்திற்கும், மெட்ரோவிற்கும் 3 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளனர். அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தியாக மாறினால் தவறில்லை. அயோத்தியாக மாறினாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ராமரின் ஆட்சியை போல மாற வேண்டும் என நினைக்கிறேபம்.
உதயநிதி கனவு பலிக்காது
திருப்பரங்குன்றம் அருகே தர்கா இருப்பது எல்லோருக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என்று கூறினார். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறார். அவரின் கனவு பலிக்காது. அவருடைய காலமாக இருந்தாலும், எத்தனை காலமானாலும் அதை மாற்ற முடியாது.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இந்த 100 நாள்களில் திமுக என்ன செய்துவிடும் என்று பார்க்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் நிறைய கட்சிகள் வரும். திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது. அதில் சந்தேகமே இல்லை. திமுக மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுப்பார்கள். விசிகவுக்கு எத்தனை சீட் கொடுப்பார்கள். இப்படி பல சிக்கல்கள் உள்ளன." என்றார்.












Click it and Unblock the Notifications