சென்னை விமான நிலையத்தில் காமராஜர் சிலை! பிரதமர் மோடிக்கு என்.ஆர்.தனபாலன் கடிதம்!
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் சிலையை நிறுவக்கோரி பிரதமருக்கு என்.ஆர்.தனபாலன் கடிதம்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காமராஜர் சிலையை நிறுவ வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை நீங்களே வெளியிட வேண்டும் என பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக என்.ஆர்.தனபாலன் எழுதிய கடிதம் வருமாறு;

''சென்னை விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகு, எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று மீண்டும் விமானங்களில் சென்னை காமராஜர் விமான நிலையம் வந்தடைந்துள்ளோம் என்கிற முறையான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
மீண்டும் காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்திற்குள் வைத்திருப்பதையும் கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போன்று சென்னையில் சுமார் ரூ.2,400 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையத்தை வருகிற 27-ந்தேதி அன்று தங்களின் திருக்கரங்களால் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நல்ல வேளையில் பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலை நிறுவப்படும் என்கிற அறிவிப்பை தாங்கள் வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதே கோரிக்கையை நாடார் சமுதாய அமைப்பினரும் மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைத்து வருகின்றனர். இதனிடையே காமராஜர் சிலை விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications