"மைக் வேண்டாம்.." புதிய சின்னத்தை கேட்கும் நாம் தமிழர்.. சீமானின் சாய்ஸ் என்ன தெரியுமா!
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வேறு சின்னத்தைக் கோருவதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவாகவே காலம் இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த முறை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவுகிறது.
நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவர்களுக்கு அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் முதல்முறையாகக் கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிட்டார்கள். அப்போது அவர்கள் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டனர்.
கையைவிட்டு போன கரும்பு விவசாயி.. இது முதல்முறை இல்லை! நாம் தமிழர் இதுவரை போட்டியிட்ட சின்னங்கள் என்ன
தொடர்ந்து 2019 லோக்சபா தேர்தலுக்கும் அதே சின்னத்தைக் கோரினார்கள். இருப்பினும், மேகாலயாவில் மாநிலக் கட்சி ஒன்று அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தியைப் பெற்றதால் அதை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து அப்போது நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலைக் கரும்பு விவசாயி சின்னத்துடன் தான் நாம் தமிழர் எதிர்கொண்டது.
புதிய சின்னம்: மேலும், 2021 சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்துடன் தான் நாம் தமிழர் களமிறங்கியது. இந்த முறையும் அவர்களுக்குக் கரும்பு விவசாயி சின்னமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது கிடைக்கவில்லை.
அவர்கள் தாமதமாக விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கட்சி கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதைத் தொடர்பாக நாம் தமிழர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நாம் தமிழர் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
படகு சின்னம்: முதலில் நாம் தமிழர் ஆட்டோ சின்னத்தைக் கேட்டதாகவும் இருப்பினும் அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்குவதாகத் தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இருப்பினும், அந்த சின்னம் வேண்டாம் என்று நாம் தமிழர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அவரது சின்னம் குறித்த கோரிக்கை குறித்து ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் இந்த முறையும் வழக்கம் போல அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications