உருட்டுக்கட்டையுடன் நாதக தம்பிகள்.. பிரியாணி சமைக்கவே வைத்துள்ளார்கள்.. சீமான் கொடுத்த விளக்கம்!
சென்னை: தன் வீட்டிற்கு வந்துள்ள தம்பிகளுக்கு பிரியாணி சமைப்பதற்காக தான் கைகளில் உருட்டுக்கட்டை எடுத்து வைத்திருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். வீட்டை முற்றுகையிட வருவோர் கற்களை வீசினால் வெறும் கையுடன் அடி வாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பியுள்ள சீமான், இந்த போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி அளித்தது எப்படி என்றும் தெரிவித்துள்ளார்.
பெரியாரை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி பேசி வருவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியார் ஆதரவு இயக்கங்கள் அறிவித்தன. திக, தபெதிக, மே 17 இயக்கம் என்று 30க்கும் அதிகமான அமைப்புகள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவிருந்தது.

இதன் காரணமாக சீமானின் வீட்டில் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் நேற்றிரவு முதலே சீமான் வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்று காலை சீமான் வீட்டின் முன் இருந்த நாதகவினர் சிலர் உருட்டுக் கட்டையுடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் நாதக தொண்டர்கள் கைகளில் எதற்காக உருட்டுக் கட்டை இருந்தது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் என் வீடு முற்றுகையிடும் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாதக தொண்டர்கள் கைகளில் இருக்கும் உருட்டுக்கட்டை, இங்கு வந்துள்ள பிரியாணி சமைப்பதற்காக எடுத்து வைத்துள்ளதற்காக தான். அதனை தான் எடுத்து கொண்டு நிற்கிறார்கள். அதேபோல் வெறும் கையுடன் நின்று கற்களால் அடி வாங்க வேண்டும் என்று கூறுகிறீர்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பெரியார் குறித்த பேச்சிற்கான ஆதாரம் தொடர்பான கேள்விக்கு, பெரியார் குறித்த என் பேச்சிற்கு எதிராக வழக்கு வந்தால், அங்கு ஆதாரத்தை அளிப்பேன். பெரியார் பேசிய கருத்துகளை தான் நான் பேசுகிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது. திருமுருகன் காந்திக்கு என் தம்பிகள் பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications