சீமானை சுற்றி வளைக்கும் நெருக்கடி.. பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக வளசரவாக்கம் போலீசார் சம்மன்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். வளசரவாக்கம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சீமான் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு கடந்த 17 ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது, "விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். மேலும் 'மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. எனவே தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியிருப்பது சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது.
சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது' என உத்தரவிட்டார்.
இந்நிலையில், விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை, வளசரவாக்கம் போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். பாலியல் வன்கொடுமை புகாரில் நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவால் போலீசார், சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications