தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சுப்பா ஜோக் மாதிரி போதையில் உளறும் சீமான் - விளாசிய விடுதலை ராஜேந்திரன்
சென்னை: தமிழ்நாட்டில் கட்டி காக்கப்பட்டு வரும் பொது ஒழுக்கம், பொதுநாகரிகத்தை சீர்குலைக்கும் வகையில் யாரோ ஒருவர் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டின் பொது அடையாளமாக பார்க்கப்படுகிற தலைவர் தந்தை பெரியாரை விமர்சிப்பது என்பது 'தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சு' திரைப்பட நகைச்சுவை போல.. போதையில் உளறுவதாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராஜேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை க.ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கருத்து மாறுபாடுகள் என்பது எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். தந்தை பெரியார் ஒரு முனையில் இருந்தார்; அதற்கு எதிர்முனையில் ராஜாஜி இருந்தார். ஆனாலும் இரு தலைவர்களிடையே ஆரோக்கியமான விவாதம், போராட்டம் இருந்தது.

பொது நாகரிகம் சீர்குலைப்பு
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை கட்டிக் காக்கப்பட்ட பொது ஒழுங்கை, பொது நாகரிகத்தை சீர்குலைக்கின்ற அளவுக்கு யாரோ ஒருவர் ஒரு கட்சியைத் தொடங்கி பேசுகிறார். தமிழ்நாட்டின் பொது அடையாளமாகப் பார்க்கக் கூடிய தலைவர்தான் தந்தை பெரியார்.
தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்
தந்தை பெரியாரின் கொள்கையைப் பற்றி விமர்சித்தால் அதற்கு நாம் பதில் சொல்லலாம்.ஆனால் அவர் சொல்லாத, பொய்யான, அவதூறுகளைப் பரப்பி, பெரியாரின் பொது ஒழுக்கத்தைப் பற்றி இழிவாகப் பேசி, அவரது பிம்பத்தை, தந்தை பெரியார் மீது தமிழ் மக்கள் வைக்கிற மரியாதையை குலைக்க வேண்டும்- சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒருவர் பேச கிளம்பி இருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.
ஜனகராஜ் ஜோக் போல பேசும் சீமான்
சீமான் இதுவரை சொன்ன அத்தனை பொய்களுக்கும் ஆதாரப்பூர்வமான மறுப்புகள் அத்தனையும் சொல்லப்பட்டுவிட்டன. சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்லி.. அதாவது தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சுப்பா என்கிற ஜனகராஜின் திரைப்பட நகைச்சுவை காட்சி போல திரும்ப திரும்ப போதையில் உளறுகிற மாதிரியான உளறல்தான் சீமானின் பேச்சு.
வெளியே வந்த சீமான் ஆதரவு சக்திகள்
தந்தை பெரியாரை நீங்கள் எதிர்த்துப் பேச பேச பெரியாரிய உணர்வு என்பது மேலும் மேலும் கூர்மையாகும்; மேலும் மேலும் அழுத்தமாகும்; ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெரியார்மயமாகும் நிலைமைதான் உருவாகும். இதனைத்தான் சீமான், சீமானுக்கு ஆதரவான துக்ளக் குருமூர்த்தி, பாஜக எச்.ராஜா, பிராமணர்கள் போராட முன்வர வேண்டும் என அழைத்த காஞ்சி சங்கராச்சாரியார்.. என அத்தனை சக்திகளும் இப்போது வெளியே வந்துவிட்டன.
தமிழ்நாட்டில் இரண்டு அணிகள்
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு அணிகள் தெளிவாக உருவாகிவிட்டன. ஒன்று பெரியார் அணி; இன்னொன்று பெரியாரிய எதிர்ப்பு அணி. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம். இந்த சில்லு வண்டு விஷயங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது; ஒரு நான்கைந்து நாட்களுக்குதான் இப்படி பெரியாருக்கு எதிராக பேசுவார்கள்.. அதற்குப் பின் இதனைப் பற்றி பேசமாட்டார்கள்.. விஷயம் முடிந்துவிடும்.. தமிழ்நாடு மண் இதனை ஜீரணிக்காது. இவர்களுடைய முகத்திரைதான் கிழியும். பாஜகவுக்கு இந்த மண்ணில் இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆதரவும் அடியோடு சமாதிக்கு போகப் போகிறது. அதுதான் இனி நடக்கப் போகிறது. இவ்வாறு விடுதலை ராஜேந்திரன் கூறினார்.
சீமானின் பெரியார் சர்ச்சை
தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கான ஆதாரங்களை பெரியார் இயக்கத்தினரும் அமைப்புகளும் கேட்ட போதும் சீமான் தரவில்லை. இதனையடுத்து சீமான் வீட்டை ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தை அனுமதி இல்லாமல் நடத்தியதற்காக 870 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் இந்தப் போராட்டத்துக்கு எதிராக சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உருட்டுக் கட்டைகளுடன் குவிந்தனர். அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அவர்களுடன் உணவருந்தினர் சீமானும் அவரது மனைவி கயல்விழியும்.












Click it and Unblock the Notifications