சீறி வந்த சீமான்..”குடிவாரி கணக்கெடுப்பு எப்போது! பெரியார் மண் என தற்புகழ்ச்சி” -நிதிஷுக்கு பாராட்டு
சென்னை: பீகார் மாநிலத்தை போல் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? நாட்டிலேயே முதன் முறையாக குடிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதனை அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் வெளியிட்டுள்ள பீகார் மாநில முதலமைச்சர் உண்மையான சமூகநீதிக் காவலர் ஐயா நிதீஷ் குமார் அவர்களுக்கு அன்பு நிறைந்த பாராட்டும், வாழ்த்துகளும்.

அனைத்து மக்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதே
உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். அதற்கு அடித்தளமாக விளங்கும் குடிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதன் மூலம் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார்.
சமூகநீதிக்கான நெடும் பயணத்தில் ஐயா நிதிஷ்குமார் நிலைநாட்டியுள்ள புதிய மைல்கல் என்றென்றும் அவரது புகழை அழியாதுப் போற்றும் வரலாற்று பெருஞ் சாதனையாகும். குடிவாரி கணக்கெடுப்பு மூலம் பீகாரில் 63% உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறும் 27% இட ஒதுக்கீட்டையும், மாறாக வெறும் 15% மட்டுமே உள்ள முன்னேறிய வகுப்பினர் 10% இட ஒதுக்கீட்டையும் பெற்று வரும் சமூக அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
'எல்லார்க்கும் எல்லாம்' என்று திராவிடத்திற்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது குடிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதல்ல சமூக நீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச்செய்வதே உண்மையான சமூகநீதி என்பதை எப்போது உணரப்போகிறது 'திராவிட மாடல்' திமுக அரசு?
சமுகநீதி மண் என்று சொல்லிக் கொள்ளாத பீகார் மாநிலம் குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து உண்மையான சமூக நீதிக்கான முதல் அடியை எடுத்து வைத்து முன்னேறி சென்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் சமூக நீதி மண், பகுத்தறிவு பூமி, பெரியார் மண், அண்ணா மண் என்றெல்லாம் தற்புகழ்பாடும் திராவிடத் திருவாளர்கள் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த எப்போது முன்வரப் போகிறார்கள்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications